உலகில் மிகப்பெரிய மக்கள் மீட்புப் பணியின் ஒரு தொகுதி இன்றுகாலை வெற்றி -அரசாங்கம்
உலகிலேயே மிகப்பெரியளவில் பணயக் கைதிகளாக புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அப்பாவி மக்களை மீட்கும் நடவடிக்கையின் ஒருபகுதி இன்றுகாலை வெற்றி காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் தகவல்படி, புலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்த 35ஆயிரம் பொதுமக்கள் இன்றுகாலை பாதுகாப்பான பகுதியை அடைந்துள்ளனர். கடைசியாக கிடைத்த தகவல்படி அம்பலவன்பொக்கணை மற்றும் வலயர்மடம் பகுதியிலிருந்த பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பல்லாயிரக் கணக்கானோர் அங்கிருந்து தப்பிவரும் முனைப்பை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் புலிகளால் மூன்று கிலோமீற்றர் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்த மண்அணையை இன்றுகாலை படையினர் கைப்பற்றியதே மக்கள் வெளியேறுவதற்கான முக்கிய வழியாக இருந்துள்ளது. இதனாலேயே அங்கிருந்து தப்பிக்கும் வாய்ப்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தப்பி வந்தவர்கள்மீது இன்றுஅதிகாலை புலிகள் மூன்று தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டதில் சிறுவர்கள், பெண்கள் அடங்கலாக 17பொதுமக்கள் பலியானதுடன், 100ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். முதலில் வெளியேற முயற்சித்த மக்களை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதனை தவிர்த்துக் கொள்வதற்காக மக்கள் கடலேரியை நோக்கி நகர்ந்தபோதே அவர்கள்மீது புலிகள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது காயமடைந்தவர்களை விமானம்மூலம் கொழும்புக்கு கொண்டுவந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Average Rating