மட்டக்களப்பில் மாணவி கடத்தல்; பெற்றோர் உறவினர் ஆர்ப்பாட்டம்.. குற்றவாளிகளை பிடிக்க அமைச்சர் கருணாஅம்மான் வேண்டுகோள்
மட்டக்களப்பு, கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவி இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார். இதனைக் கண்டித்து மட்டக்களப்பில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சதீஸ் குமார் தினூஷிகா (8 வயது) என்ற மாணவியே கடத்தப்பட்டவராவார். இவர் மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோயில் வீதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் பாடசாலைக்கு கொண்டுவந்து விட்டுச் சென்ற இம்மாணவியின் பாட்டன் முத்துவேல் என்பவர் மீண்டும் பாடசாலைவிடும் நேரமான ஒரு மணிக்கு வந்து பார்த்தபோது மாணவியைக் காணவில்லையென மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இம்மாணவி கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிவித்து இம்மாணவியை விடுவிக்கக் கோரி இப்பாடசாலைக்கு முன்பாக இப்பாடசாலையின் மாணவர்களின் பெற்றார், காணாமற்போன மாணவியின் பெற்றார், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீதியை மறித்து சுலோகங்களைத்தாங்கி இவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இம்மாணவியை விடுவிக்குமாறு கோரிய சுலோகங்களை இவர்கள் தாங்கியிருந்தனர். இவ்ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
அமைச்சர் கருணா அம்மான்
இதேவேளை, மட்டக்களப்பில் கடத்தப்பட்ட மாணவி தினூஷிகா சதீஷ்குமார் என்ற சிறுமியை உடனடியாக கண்டுபிடிக்கவும் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அம்மான் பொலிஸ் மா அதிபரிடமும், கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு யூனியன் கல்லூரியில் மூன்றாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் ஒரு சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வாறான செயல்கள் தொடர்வது ஆரோக்கியமானதல்ல.
பாடசாலைக்குச் சென்ற மேற்படி சிறுமியின் கடத்தலுக்கு பின்னணியில் எத்தகைய சக்தி இருப்பினும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கருணா அம்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Average Rating