இடம்பெயர்ந்து வந்த பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறுகின்றனர்- செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு
அரச கட்டுப்பாட்டுப் பிரதேச நலன்புரி நிலையங்களுக்கு வருகை தந்துள்ள பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் அடிப்படை வசதிகளின்றி அல்லலுறுவதாக செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு கவலை வெளியிட்டிருக்கிறது. அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்ளை வழங்கும் நோக்கில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அண்மையில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வருகை தந்த 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்குமிட வசதிகளின்றி திறந்த வெளியில் அவதியுறுகின்றனர் என செஞ்சிலுவைச் சங்கத்டதின் இலங்கைப் பிரதிநிதி கோர்டன் பெகோன் தெரிவித்துள்ளார். போதியளவு உணவு, குடிதண்ணீர், அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ வசதி இன்றி பாதிக்கப்பட்ட மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கடும் வெய்யிலில் மர நிழலில் அடைக்கலம் புகுந்திருந்ததனை தான் நேரில் பார்வையிட்டதாகவும் கோர்டன் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் முதல் தடவையாக குறித்த பொதுமக்கள் யுத்த பீதியிலிருந்து மீண்ட திருப்தியுடன் காணப்படுகின்றனர் என்றும், இடம்பெயர்ந்த மக்களுக்கு நீண்ட காலத்திற்கு உதவிகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating