சிறி டெலோ.. சிரிப்பிற்குரியதாக.. புலிக்கு புலிவாலையும், அரசிற்கு சிங்கத் தலையையும் காட்டுகின்ற அசிங்கம்!!! –சுவிஸ் உமாதாசன் (கட்டுரை)

Read Time:12 Minute, 29 Second

anifoxதமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தினை இலக்காகக் கொண்டு எத்தனையோ இயக்கங்கள் உருப்பெற்றிருக்கின்றன. ஆயுதங்களையே அதற்கான ஆயுதமாகக் கண்டெடுத்து, கடந்த காலங்களில் களேபரங்களைத் தோற்றுவித்து, பின்னர் அப்போராட்டங்கள் காரணமாக ஏற்பட்ட அழிவுகளையும், இழப்புகளையும், அடைவுகளையும், தூரநோக்கு சிந்தனைகளையும், தெளிவான முடிவுகளையும் மையப்படுத்தி தங்களது நிலைகளிலான மாற்றங்களை அவ்வியக்கங்கள் உட்புகுத்திக் கொண்ட வரலாறு சிறந்ததாகும். ஆனால், அவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்காது தொடர்ந்தும் ஆயுதங்களின் மீது நம்பிக்கை கொண்டு கடைசியில் பட்டுத்தேறிய மட்டையாக சூம்பிப்போய், அரசியல் செய்வோம் என்று பிரயோசனமில்லாத கொக்கரிப்புக்களை மேற்கொள்ளுகின்ற ஓரிரு இயக்கங்கள் இன்னும் இவ்வரலாற்றுப் புழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. மான்களிடையே சிங்கம் போல், தமிழர்களிடையே புலிகள் தமிழ் மக்கள் கூட்டத்தை கூண்டோடு அழிக்கும் செயலை இன்னும் முன்னெடுத்துக் கொண்டு தான் இருக்கின்றன. புலியாக இருந்து தமிழர்களின் வாழ்வையே சிக்கிச் சின்னாபின்னப்படுத்தி, மக்கி மண்ணாகிப் போகவைத்த செயலை அவை இன்னும் செய்து கொண்டுதான் இருக்கின்றது. இருந்த போதும் அவை ஏதாவதோர் கொள்கையிலேயே இருந்து கொண்டு செயற்பட்டு வருகின்றது. ஆனால் இவற்றுடனெல்லாம் ஒப்பிட முடியாதவாறு தங்கள் செயற்பாடுகளை அமைத்துக் கொண்டு, மழைக்கு முளைத்த நச்சுக்காளானாக உருவாகியிருக்கிறது சிறி டெலோ என்னும் அமைப்பு.

கொள்கையென்றும் முற்போக்கு சிந்தனையென்றும் எதனையும் கொண்டிராது, ஒரு சில எலும்புத்துண்டுகளுக்காக இலங்கையில் முடிவுறப்போகும் யுத்தத்தை முடிவுறாமல் செய்து, தமிழர்களைத் தவிக்க விடுவதினையே குறியாகக் கொண்டு முளைத்தெழும்பியிருக்கிறது இந்த சிறி டெலோ இயக்கம் என்றால் அது உண்மைக்குப் புறம்பானதல்ல. ஆரம்பகால தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களில் ஒன்றாகத் திகழ்ந்திருந்த டெலோ இயக்கத்தின் வழிவந்ததாகவே தங்களை அறிவித்துக் கொண்டு உருவாக்கம் பெற்றிருக்கும் இந்த இயக்கத்தினரின் செயற்பாடுகள் அவ்வியக்கத்தின் ஆரம்பகால முற்போக்கு சிந்தனை மிக்க மூத்த உறுப்பினர்களின் கௌரவங்களுக்கு இழுக்கினை ஏற்படுத்துவதாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பது வருந்தத் தக்கதாகும்.

ஒரு கால கட்டத்தில் டெலோ இயக்கம் தங்களை புலிகளின் ரி.என்.ஏ. யுடன் இணைத்துக் கொண்டு செயற்பட்டு வந்திருந்தனர் பின்னர் பின்னராக நலிவுற்று நலிவுற்று தம்மை ஒவ்வொருவருடன் இணைத்துக் கொண்டு செயற்பட்டு வந்தனர். அந்த வகையில் தற்போது உள்ள ஒரு தமிழ் அமைப்புடனும் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள். இவைகளெல்லாம் கூட பரவாயில்லை ஆனால் இந்த சிறிடெலோ இயக்கமோ சற்று வித்தியாசமான முறையில் அந்தப் பக்கமும் இந்தப்பக்கமுமாக நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் ஒத்தூதுவதாக இருப்பதானது வேடிக்கைக்குரியதாக மாறியிருக்கின்றது. அதாவது, புலிகளுக்கு புலிவாலையும், அரசிற்கு சிங்கத் தலையையும் காட்டிக் கொண்டு, பல்வேறு கபடத்தனங்களை மேற்கொண்டு வரும் இந்த அமைப்பினர், நாரதர் பாணியில் குழப்பங்களை உண்டுபண்ணித் திரிவது எவ்வளவு வெட்கக் கேடானது.

பணத்திற்காகவும், பெருமைக்காகவும், இன்னும் சில அடைவுகளுக்காகவும் வார்த்தை ஜாலங்கள் புரிவதும், தமிழர்களுக்கு கிடைக்கவிருக்கும் நல்வாழ்வினையே நிறுத்தி மீண்டும் தமிழ் மக்கள் இத்தனை காலமும் அனுபவித்து வந்த வலிகளையும், வேதனைகளையும், கஷ்டங்களையும் தொடர்கதையாக்கிவிடவே தலைப்பட்டுத் திரிவதானது தரங்கெட்ட செயல்களேயன்றோ! சாதிக்கப் போவதென்று எதுவுமே இல்லாது, பச்சோந்தியாக சாயும் பக்கமெல்லாம் பல்லிழித்துத் தொற்றிக் கொள்வதானது, இரை கவ்வும் நோக்கமேயன்றி வேறென்னதான் இருக்க முடியும்.

இப்படியாக, சிறி டெலோ இயக்கத்தினரின் கொடூர மனங்களில் புதைந்துள்ள, நாக்குவழித்து நச்சரிக்கும் எண்ணங்கள் என்னவென்பதை புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமல்ல. தற்போது உள்ள அல்லது உருவாகின்ற தமிழ் இயக்கங்களின் தேவைகள் என்னவென்று பார்த்தால் ஒன்று அரசின் பக்கம் நின்று கொண்டு, தமிழர்களையே தடிமாடுகளாக மாற்றியமைத்து, அவர்களையே கொன்றும் புதைத்து கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த புலிகளின் ஆட்டத்திற்கு முடிவுகட்டுவது, அன்றேல் புலிகளுக்குச் சார்பாக நின்று கொண்டு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி தங்கள் இன்னுயிர்களை வீணாக மாய்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இவற்றை விடுத்து, அரசிற்கும் பல்லிழித்து, புலிகளுக்கும் கண்ணடித்து தலையையும், வாலையும் காட்டி காட்டி காலம் கடத்திக் கொண்டிருப்பதால் தமிழர்களுக்குக் கிடைக்கப்போகும் பலன்கள்தான் என்ன?

உதாரணமாக இவ்வாரம் சுவிஸில் நடைபெறவுள்ள இவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்த உள்ளவர் மிருசுவில் எழுதுமட்டுவாலைச் சேர்ந்தவரும் தற்போது சுவிஸில் சொலத்தூன் எனும் பகுதியில் வசிப்பவருமான மாணிக்கம் மணிசேகரன் என்பவர் ஆகும். இவர் முன்னைநாள் ரெலோ உறுப்பினராக இருந்த போதிலும் புலிகளின் தீவிர ஆதரவு செயற்பாட்டாளர் ஆவார். புலிசார்பு ரெலோ அமைப்பைச் சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன் சுவிஸ் நாட்டுக்கு வரும்போதெல்லாம் அவருக்குத் துணையாக (பாதுகாவலனாக) அவருடன் இணைந்து புலிகளின் கருத்தரங்கில் கலந்து கொள்பவர். அத்தோடு புலிகளால் சுவிஸில் நடாத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்து கொள்வது மட்டுமல்லாது புலிகளின் முன்னைநாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் இறந்த போது உடனடியாக சுவிஸ் சொலத்தூன் மாவட்டத்தில் அஞ்சலிக் கூட்டத்தை தானே ஏற்பாடு செய்து தன்து தலைமையில் நடாத்தியவர் மட்டுமல்ல சிலதினங்களுக்கு முன்னர் யுத்தநிறுத்தம் கோரி புலிகளால் சுவிஸ் ஜெனீவா ஜ.நா.சபை முன்பாக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் தேசியக்கொடியை எரித்து தன்து புலிமுகத்தை அம்பலப்படுத்தியவர். இதேவேளை இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடாத்த ஜேர்மனியிலிருந்து வருபவர் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்துடன் இரகசியமாக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி இலங்கை அரசு சார்பான போராட்டங்களை முன்னின்று நடாத்துபவர் ஆவார். இவர் சிலமாதங்களுக்கு முன்னர்கூட சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் இலங்கை அரசு சார்பான போராட்டத்தில் முன்னின்று செயற்பட்டவர்கள் ஆகும்.

பெரும் கடப்பாடுகளுடன் தமிழர்களுக்காக கடமையாற்றி வருகின்ற உண்மையான ரெலோவின் முன்னைநாள் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் இவ் இழிவமைப்பினர் கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தறுக்க நினைத்து காரியமாற்றுவதும், வார்த்தை ஜாலங்கள் புரிந்து பொய்களைப் புனைந்து தள்ளுவதும் கழிவறையில் ஒதுக்கப்பட வேண்டியதற்கு ஒப்பானதாகும். இதுபோன்ற இவர்களது இரண்டுங்கெட்டான் செயல்களினால் என்னதான் நலன்கள் உருவாக முடியும்???

பச்சோந்தியாக இருந்து கொண்டு கண்ட கண்ட நெறிகெட்ட செயல்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, காலத்தையும், கடமையையும் விரயமாக்கிக் கொண்டிருக்கும் இந்த சிறி டெலோ அமைப்பினர் பற்றரிக்கும், மின்சாரத்திற்கும் இயங்குவது போன்று எடுப்பார் கைப்பிள்ளையாக இயங்காமல், ஏதாவதொரு கொள்கையினைத் தெரிவு செய்து அதில் நிலைத்து நின்று, தமிழர்களை வாழ வைக்கத் தலைப்பட வேண்டும். அல்லது வால்களாக இருந்து வடுத்தெரியாமல் அழிந்து போக வேண்டும். என்பதே தமிழ் நலன் விரும்பிகளின் ஏகோபித்த விருப்பமாக இருந்து கொண்டிருக்கிறது.

இவர்கள் தங்கள் வெறும் வாய்களால் அங்கும் இங்கும் ஜாடைசெய்து…. ஜாடைசெய்து…. வெளியிடும் பொய்ப் பேச்சுக்கள் எல்லாமே தமிழர்களின் நல்வாழ்வையே சீர்குலைக்கும் சாதனமாகி விடும். ஆகவே அதுவுமின்றி, இதுவுமின்றி இரண்டு பக்கமும் இழுபட்டுத் திரியும் இந்த அமைப்பினர் அவர்கள் சார்ந்திருக்கும் ரெலோ அமைப்புக்கும், மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தம்முயிரை ஈந்த அதன் மூத்த உறுப்பினர்களுக்கும் போராளிகளுக்கும் அவமானங்களைத் தேடிக் கொடுக்காது.. அடங்கிப்போவது, அல்லது அனைவருக்கும் நன்மையாக அழிந்து போவதே சாலச் சிறந்ததாகும்..!!!
–உமாதாசன் -சுவிஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

5 thoughts on “சிறி டெலோ.. சிரிப்பிற்குரியதாக.. புலிக்கு புலிவாலையும், அரசிற்கு சிங்கத் தலையையும் காட்டுகின்ற அசிங்கம்!!! –சுவிஸ் உமாதாசன் (கட்டுரை)

  1. Whos is Umathasan ????? , he is Pulikuddy Ranjan, (PLOTE Swiss Ranjan), they affrai about TELO in Vavuniya)

  2. நண்பர் உமாதாஸன் அவர்களுக்கு…
    தங்களது கட்டுரையை வாசிக்கும்போது சற்று சிந்திக்கவும் வைத்தது.
    ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் அண்ணன் ஸ்ரீசபாரத்தினம் தலைமையிலிருந்து புலிகளின் அடிவருடி செல்வம் அடைக்கலநாதனிடம் கைமாறியது. இந்திய இராணுவத்தின் வருகையின்போது ரெலோ அமைப்பு ஸ்ரீசபாரத்தினத்தின் அண்ணன் ஸ்ரீகாந்தா அவர்களின் தலைமையிலேயே இலங்கைக்கு மீண்டும் காலடி வைத்தது. இதற்கிடையில் போராட்டங்களில் பங்கெடுத்திராமல் இந்தியாவிலே சும்மா நின்ற செல்வத்திடம் இலங்கைக்கு இறங்கச் சொன்னதே பிரபாதான். அதன்பின் ஸ்ரீகாந்தா தலைமையில் இயங்கிய இளைஞரை புலிகள் பாணியில் பலியெடுத்ததும், பின்னர் புலிகளுடன் கூட்டு வைத்ததும் வேறு கதை.
    ஆனால், செல்வத்தின் ரெலோவின் நடவடிக்கைகள் பிடிக்காத இளைஞர் அணியே தற்போது உண்மைத் தலைவன் வழிநடக்க ஸ்ரீரெலோ எனும் பெயரில் களமிறங்கியுள்ளனர் எனத் தெரிகிறது. வந்தோரை வரவேற்கும் தமிழர்; இவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்துத் தீர்ப்பளிப்பார்கள் என நம்புவோமாக!

  3. எத்தனை இயக்கங்கள் வந்தாலும் பரவாயில்லை. தமிழ் மக்களைச் சுரண்டாமல், கொள்ளையடிக்காமல், கப்பம் அறவிடாமல் சுதந்திரமாக இருக்கவிட்டாலே போதும்!

  4. Whos is Umathasan ????? , he is Pulikuddy in Zurich ????? is in it?????

  5. இந்த ஈழத்தமிழ் இனம் விட்ட ஒரே ஒரு பெரும் தவறு ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களை முட்செடிகள் என்று தெரியாமல் வளர்த்துவிட்டதுதான்:இப்போது அதன் பலனை அறுவடை செய்கின்றோம். எல்லாம் அவன் செயல்!

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post வெளிநாடு அனுப்புவதாக கூறி பணமோசடி