தயா மாஸ்டர் , ஜோர்ஜ் மாஸ்டர் இருவரும் அரசியலில் பங்கு கொள்ளத் தகுதியற்றவர்கள் -அமைச்சர் முரளிதரன்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டு தீவிர ஆயுத போராட்டத்தில் பங்கேற்காத தயா மாஸ்டருக்கோ அல்லது ஜோர்ஜ் மாஸ்டருக்கோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடாது என அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். குறித்த இருவருமே அரசியலில் பங்கு கொள்ளத் தகுதியற்றவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முக்கிய போராளிகள் அல்லாத தயா மாஸ்டருக்கோ அல்லது ஜோர்ஜ் மாஸ்டருக்கோ அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களுடன் நெருக்கமுடைய நபர்களை அரசியல் தலைவர்களாக நியமிப்பதன் மூலம் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என அரசாங்கம் கருதுவதாகவும், இதன் காரணமாக தயா மாஸ்டரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. தயா மாஸ்டரை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதன் மூலம் எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளை சரணடையத் தூண்ட முடியும் என அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவோர் சுட்டிக்காட்டியுள்ளனர். எவ்வாவெறினும் தயா மாஸ்டர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க வேண்டுமானால் ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலக வேண்டும் எனவும், இவ்வாறு பதவி விலகும் நபருக்கு பெருந் தொகையான பணமும் ஏனைய சலுகைகளையும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating