மக்கள் இருக்கும்வரை தோல்வியில்லை: விடுதலைப் புலிகள்
பொதுமக்கள் தம்முடன் இருக்கும்வரை தமக்குத் தோல்வி ஏற்படாது என விடுதலைப் புலிகளின அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். பொதுமக்களை விடுதலைப் புலிகள் வெளியேற அனுமதிக்கவில்லையென்ற ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அரசாங்கத்தின் குற்றச்சாட்டையும் அவர் மீண்டும் மறுத்துள்ளார். “மக்கள் எம்மை விட்டுச் செல்ல விரும்பவில்லை” என நடேசன் பி.பி.சி.யின் சிங்கள சேவையான சந்தேசியாகவுக்குக் கூறியுள்ளார். அதேநேரம், பொதுமக்கள் வாழ்ந்து வரும் பகுதிகள் மீது அரசாங்கப் படைகள் தாக்குதல்களை நடத்துவதாகவும், பாதுகாப்பு வலயங்களுக்குள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல்களை நடத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இன்னமும் வன்னியில் இருப்பதாகவும், தாம் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் மேலும் கூறினார். “இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணமுடியும் என நாம் நம்புகிறோம்” என்றார் அவர். இதேவேளை, விடுதலைப் புலிகள் வசமிருந்த மேலும் சிறிய நிலப்பரப்பை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் மண்அணைகளை மீட்டிருப்பதுடன், விடுதலைப் புலிகள் பலமான எதிர்த்தாக்குதல்களை நடத்திவருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது.
One thought on “மக்கள் இருக்கும்வரை தோல்வியில்லை: விடுதலைப் புலிகள்”
Leave a Reply
You must be logged in to post a comment.
இந்திய இலங்கை ஒப்பந்தம் வந்த போது அதை நிறைவேற விடாது செய்ததில் புலிகளின் பங்கும் பெரிதானது. அதை நிறைவேற்ற இந்திய அரசிற்கு உதவியிருந்தால் பின்னாளில் படிப்படியாக எமது அதிகாரங்களைப் பெற்றுத் தர இந்திய அரசும் உதவியிருக்கும். இவ்விடயத்தை அப்போது இந்திய அரசுடன் தொடர்பிலிருந்த அமிர்தலிங்கம் அவர்களே அன்றைய இந்திய அரசின் நோக்கத்தை பின்னாளில் சுட்டிக் காட்டியுமிருந்தார். பினபு இந்திய இராணுவத்தை எதிர்க்க பிரமேதாசா அரசுடன் கைகோர்த்து நாங்கள் சகோதரர்கள் இன்று அடித்து கொள்வோம் நாளை அணைத்துக் கொள்வோம் எமது பிரச்சினைகளை நாமே பார்த்துக் கொள்வோம் என்று கூடிக் குலாவினர் புலிகள். இந்தச் சந்தர்ப்த்தைப் பாவித்து பிரேமதாசா அரசுடன் ஏதாவது பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வு பெற்றார்களா புலிகள்?? மாறாக தமது அரசியல் எதிரிகளை போட்டுத் தள்ள பிரேமதாசா அரசின் மறைமுக உதவிகளையும் ஆயுதங்களையும் கோடிக்கணக்காக பணத்தையும் பெற்றுக் கொள்ளவே புலிகள் முயன்றனர். ரணில் அரசுடன் போர் நிறுத்த ஒப்பத்தம் செய்யப்பட்ட போது கூட புலிகள் தம்மை வளப்படுத்தவே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு கருணா புலிகளிலிருந்து பிரிந்த பின் கருணாவிடமிருந்து ஆயுதக் களைவைச் செய்யச் சொல்லியே அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரணில் அரசுடன் சுவிசில் பலமுறை பேச்சு வார்த்தை நடாத்திய புலிகள் ஒருமுறையாவது தமிழ்மக்களுக்கான தீர்வைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்களா?? மாறாக வரி என்ற பெயரில் பகல் கொள்ளை அடித்ததும் வெளிநாட்டுத் தமிழர்களிடமும் வெளிநாட்டு உதவி நிறுவனங்களிடமும் தமிழ் மக்களுக்கு நிவாரணமளிக்க என்று சுருட்டிய பணத்தில் தமகு்கு ஆடம்பர பங்களாக்களும் நீச்சல் தடாகங்களும் கட்டி சொகுசு வாழ்க்கை நடத்தத் தொடங்கினார்கள். ஆனால் வன்னியில் புலிகளின் பிடியில் மாட்டுப்பட்ட மக்கள் வழமைபோல் அன்றும் இன்றும் மரங்களின் கீழ் வாழ்க்கையெனும் கற்கால வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றவர்களே புலிகள். இவர்களை நம்பி எனியும் நம் எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையையும் அழித்துக் கொள்ள விரும்புகின்றீர்களா? இந்த நரகத்தை உருவாக்கியவர்கள் தமது சொந்த வாழ்கையை நன்கு வாழ்ந்து விட்டார்கள். இந்த நரகத்தை உருவாக்கவும் தொடரவும் உதவிய புலன் பெயர் தமிழர் எந்தக் குறையும் இன்றி வாழ்கிறார்கள்.