முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல்: மக்களைக் காக்குமாறு ஆனந்தசங்கரி வேண்டுகோள்
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 நோயாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், வடபகுதி தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் காயமடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு மருத்துவக் குழு அனுப்பிவைக்கப்பட வேண்டுமென அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். “இன்று காலை 7.45 மணியளவில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள வைத்தியசாலையிலிருந்த 26 பேர் கொல்லப்பட்டதுடன், 100ற்கும் அதிமானவர்கள் காயடைந்துள்ளனர். இது குறித்து நான் கவலையடைகிறேன். இந்தப் பகுதியில் மருத்துவ உதவிவேண்டி ஆயிரக்கணக்கானவர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர்” என ஆனந்தசங்கரி கூறியுள்ளார். விடுதலைப் புலிகளால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது என்றாலும், பொதுமக்களைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், பாதுகாப்பு வலயத்தின் மீது தாம் தாக்குதல்களை நடத்தவில்லையெனப் பாதுகாப்புத் தரப்பினர் கூறிவருகின்றனர். இந்த நிலையிலேயே வடபகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிக்கும் வி.ஆனந்தசங்கரி, முள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார்.
Average Rating