வாய்க்கால் பிரதேசத்துக்குள் படையினர்: புலிகளின் 25 சடலங்கள் ஆயுதங்கள் மீட்பு
இராணுவத்தின் 58 ஆவது படையணியினர் கரைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட மோதலின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் 25 புலிகளின் சடலங்களும் 20 ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் படையினரால் கைப்பற்றப்பட்டன. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் படையினர் பிரவேசித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார கூறினார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரிகேடியர் மேலும் கூறியதாவது, முல்லைத்தீவு வடுவக்கால் பிரதேசத்தில் முன்னேறிய இராணுவத்தின் 59 ஆவது படையணியினர் ஏ 35 வீதியின் கிழக்காக 300 மீற்றர் தூரப் பிரதேசத்தைக் கைப்பற்றினர். இங்கு பதுங்கியிருந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தும் மூன்று புலிகள் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர். இங்கு படையினர் நடத்திய தேடுதலில் புலிகளின் 10 சடலங்களை மீட்டுள்ளனர். நேற்று மட்டும் 79 பொது மக்கள் 58 ஆவது படையணியினரிடம் சரணடைந்துள்ளனர். இதுவரையில் மொத்தம் 1.88.500 பேர் புலிகளிமிருந்து தப்பி வந்து படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இன்றும் 90 பொது மக்கள் படையினரிடம் தஞ்சமடைந்தனர். கடந்த 10 ஆம் திகதி புலிகளின் படையில் சேர்க்க்பட்டிருந்த மூன்று சிறுவர்கள் படையினரிடம் தஞ்சமடைந்தனர். சின்னராசா திலீபன் (16 வயது), நடேஷ் மயுரன் (16 வயது), மற்றும் சத்தியவேல் சிறிதரன் (17 வயது) ஆகியோர் வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தில் இவ்வாறு சரணடைந்தவர்களாவர். இவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் கூறினார்.
Average Rating