புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவம் உட்புகுந்தது
இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்த புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவத்தினர் உட்புகுந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் 58வது படையணி கரையாமுல்லிவாய்க்கால் வழியாகப் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்திருப்பதாக அவர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார். அதேநேரம், இராணுவத்தினரின் 59வது படைப்பிரிவு முல்லைத்தீவு கட்டுவாய்க்கால் பகுதியில் மேலும் 300 மீற்றர் தூரம் உட்புகுந்திருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். விசேட அதிரடிப்படையினரின் வழி காட்டிலிலேயே 59வது படைப்பிரிவினர் உள்நுழைந்திருப்பதாக இராணுவம் கூறுகிறது. மேலும் சிறிய பகுதியைக் கைப்பற்றினால் பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்குண்டிருக்கும் மக்களை மீட்பதற்கு மற்றுமொரு மாற்றுவழியாக அது அமைந்துவிடும் என பாதுகாப்பு அவதானிகள் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினர் முன்னேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்ததிலிருந்து புதிதாக அறிவிக்கப்பட்ட 2 கிலோமீற்றர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் கடுமையான பதில் தாக்குதல்களை நடத்திவந்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறே முன்னேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
Average Rating