சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சந்தித்தார் பிரதம நீதியரசர்
பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்திருக்கும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1784 பேர் வவுனியா நெலுங்குளம் தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக முகாம்;களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேரில் சென்று சந்தித்த பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா அவர்களுடன் நட்புடன் கலந்துரையாடியிருந்ததுடன், பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து அவர்களின் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார். அதன் பின்னர் அவர் ராமநாதன் நலன்புரிக் கிராமத்தில் தங்கியிருக்கும் பொதுமக்களையும் சந்தித்திருந்தார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்திருக்கும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்குப் புனர்வாழ்வளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்புடன் முன்னர் தொடர்பு வைத்திருந்தவர்கள் தனியாகப் பதிவு செய்ய வேண்டுமென பாதுகாப்புத் தரப்பினர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ளவர்களிடம் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கமைய பலர் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு யாழ் குடாநாட்டிலுள்ள முகாம்களில் பெயர்களைப் பதிவு செய்தவர்கள் இடம்பெயர்ந்தோர் முகாம்களிலிருந்து தெல்லிப்பழை புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. வாராந்தம் இவ்வாறு 6 பேர் முகாம்களிலிருந்து அழைத்துச் செல்லப்படுவதாகத் தெரிய வருகிறது.
Average Rating