விடுவிக்கப்படாத பகுதியிலிருந்த பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்!!!
72மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு வலயத்திலிருந்து 50,000 பொதுமக்களை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகோடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இராணுவத்தினரிடம் சரணடைந்த பொமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றன வழங்கப்பட்டு வருவதாகவும்,தற்போது விடுதலை புலிகளின் நடமாட்டம் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் 400×600 சதுர மீற்றர் பரப்பிற்குள் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்தார்.முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பகுதிகளில் சிக்கியிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வன்னியில் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திலிருந்து மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. புலிகள் இன்று காலையில் மேற்கொண்ட தாக்குதல் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ஏப்ரல் 20-23வரையிலான காலப்பகுதியில் புதுமாத்தளான் பகுதியிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறிய பின்னர், புலிகளின் பிடியிலிருந்த எஞ்சிய பகுதிகளில் மேலும் ஒரு இலட்சம் வரையிலான மக்கள் இருப்பதாக நம்பப்பட்டது. எனினும், இந்தப் பகுதியில் சுமார் 50,000வரையிலான பொதுமக்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையும், 15-20ஆயிரம் பொதுமக்களே அங்கு எஞ்சியிருப்பதாக இலங்கை அரசாங்கமும் கூறிவந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தப் பகுதிகளிலிருந்து சுமார் 36,000 பேரை மீட்டிருப்பதாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. பாதுகாப்பு வலயப் பகுதிகளிலிருந்து அனைத்துப் பொதுமக்களும் மீட்கப்பட்டுவிட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் பின்னர் அறிவித்தது. மோதல்கள் முடிவுக்கு வருவதாகவும், இறுதி வெற்றி அண்மித்து விட்டதாகவும் படைத்தரப்பு அறிவித்ததையடுத்து, ஜோர்டான் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு அவசரமாக நாடு திரும்பினார். நாடு திரும்பிய ஜனாதிபதிக்கு கட்டுநாயகா விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு மத வழிபாடுகளும் நடத்தப்பட்டன. இறுதி வெற்றிச் செய்தியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்த நேரத்திலும் இனி வெளியிடலாம் என்றும், வெற்றி அறிவிக்கப்படும் தினம் விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப் படுவதுடன், தேசிய சுதந்திர தினமாக ஒவ்வொரு வருடமும் அந்நாள் நினைவுகூரப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating