பிரபாகரன் 2 முறை தப்பிக்க முயன்றார்: கடற்படை தகவல்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இரண்டு முறை தப்பிக்க முயன்றார் என்று இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் கடற்படையின் தீவிர கட்டுப்பாடு காரணமாக அவரால் தப்பிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் மலேசியாவுக்கு அவர் தப்பிக்க முயன்றார். இதை இலங்கை கடற்படை வெற்றிகரமாக தடுத்துவிட்டது. இதனால் அவரால் எங்கும் தப்பிச் செல்ல முடியவில்லை. இறுதியில் ராணுவத்தினரிடம் சிக்கி உயிரிழந்ததாக கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே. திசநாயக தெரிவித்துள்ளார். கடல் மார்க்கமாக ஆசிய நாடுகளில் ஏதேனும் ஒன்றிற்கு பிரபாகரன் தப்பிச் செல்லக் கூடும் என்று செய்திகள் வெளியானது. இதனால் கடல்பகுதியில் காவல் வலுப்படுத்தப்பட்டது. இதனால் அவரால் தப்பிச் செல்ல முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆம்புலன்ஸில் தப்பிச் செல்லும்போது ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ், பொட்டு அம்மான், கடற்புலி தளபதி சூசை ஆகியோர் உயிரிழந்ததாக திங்கள்கிழமை இலங்கை ராணுவம் அறிவித்தது. செவ்வாய்க்கிழமை ஏரிப் பகுதியில் பிரபாகரன் உடல் மீட்கப்பட்டதாக செய்தி மற்றும் புகைப்படங்களை இலங்கை ராணுவம் வெளியிட்டது.
Average Rating