400 சடலங்கள்: இலங்கை ராணுவம் மீட்பு
இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலிருந்து 400 சடலங்களை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இலங்கை ராணுவத்துடனான மோதலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்ததாக செவ்வாய்க்கிழமை அந்நாட்டு அதிபர் ராஜபட்ச நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதைக் கொண்டாடும் வகையில் புதன்கிழமை தேசிய விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சடலத்தை இலங்கை ராணுவம் செவ்வாய்க்கிழமை மீட்டது. முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 400 சடலங்களை ராணுவத்தினர் புதன்கிழமை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்துமே விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் சில பெண் விடுதலைப் புலி இயக்கத்தினரும் அடங்குவர். தாக்குதல் முயற்சி: இதனிடையே இலங்கையின் கிழக்குப் பகுதியில் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முயன்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 8 விடுதலைப் புலிகள் உயிரிழந்தனர். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பகுதியில் இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Average Rating