நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்னம் அஞ்சலி
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம் இன்று முற்பகல் காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கனகரட்னம் ஓமந்தை நலன்புரி முகாமில் தஞ்சமடைந்திருந்த வேளை, குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவென பொரளை ஜயரட்ன மலர்ச்சாலைக்கு சிவில் உடையினர் வாகனமொன்றில் இவரை அழைத்து வந்திருந்தனர் எனவும் அஞ்சலி செலுத்திய பின்னர் சுமார் 15 நிமிடங்கள் வரை அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தமது கட்சித் தலைவரான இரா.சம்பந்தனுடன் சில நிமிடங்கள் அவர் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை பத்மநாதனின் பூதவுடலுக்கு இது வரை பிரதி அமைச்சர்களான எம்.எஸ்.செல்லச்சாமி, மையோன் முஸ்தபா உட்பட பலரும் தமது இறுதி அஞ்சலியை இன்று செலுத்தினர்.
Average Rating