வன்னியில் நடந்தது என்ன?: நடந்தவற்றை விபரிக்கும் மக்கள்..

Read Time:10 Minute, 35 Second

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயத்தில் தாம் எதிர்கொண்ட துன்பங்களை மக்கள் தற்பொழுது வெளியிட ஆரம்பித்துள்ளனர். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் மூலம் கிடைத்த தகவல்களை கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு வலயத்திலிருந்து இடம்பெயரும்போது விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுகள் மற்றும் பாதுகாப்பு வலயப் பகுதி மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்கள், மருத்துவமனைகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்ற தாம் அனுபவித்த துன்பங்களை நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் சிலர் விபரித்ததாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது. இறுதி மூன்று மாதமாக வன்னிப் பரப்பில் நடந்த யுத்தத்தினால் 2,000 சிறுவர்கள் உள்ளடங்கலாக 15,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார அதிகாரியான சிவா என்பவர் தெரிவித்துள்ளார். தான், தனது மனைவி, ஒரு வயது மற்றும் மூன்று வயதுப் பிள்ளைகள் அனைவரும் ஆட்லறித் தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக கடந்த ஒன்பது மாதங்களில் 13 தடவைகள் இடம்பெயர்ந்ததாக அவர் கூறினார்.

புதுமாத்தளன் பகுதியில் கடந்த மூன்று மாதங்கள் தாம் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வாழ்க்கை நடத்தியதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பதுங்கு குழிகள் ஒவ்வொன்றும் 15 முதல் 20 பேர் பதுங்கியிருக்க கூடியவை எனக் குறிப்பிட்டார். மீண்டும் அவர்கள் இடம்பெயரவேண்டி ஏற்பட்டதால் சில நாட்கள் மாத்திரமே பதுங்கு குழிகளுக்குள்ளும் இருக்க முடிந்ததாக அவர் கூறினார்.

பெப்ரவரி மாதம் சுகவீனமுற்ற மக்களை கடல் வழியாக சிகிச்சைக்காக அனுப்பிவைத்ததாகவும், அதன் பின்னர் அவரைத் தான் காணவில்லையெனவும் சிவா கூறியுள்ளார்.

புதுமாத்தளன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இயங்கிவந்த தற்காலிக வைத்தியசாலை மீது பல்குழல் பீரங்கி, பொஸ்பரஷ் குண்டுகள், ரொக்கட் குண்டுகள் மூலம் மூன்று தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த சுகாதார அதிகாரி விபரித்தார்.

“இரசாயனக் குண்டுகளால் பாதிக்கப்பட்ட சிலரை நான் கண்டேன். அவர்களின் தோல்கள் எரிந்துவிட்டன. அவை பொஸ்பரஸ் குண்டுகள் என்பது உறுதி” என்றார் அவர்.

விடுதலைப் புலிகளே பொஸ்பரஸ் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதாக இலங்கை இராணுவம் புகைப்படங்களுடன் செய்திகளை வெளியிட்டிருந்தது. எனினும், விடுதலைப் புலிகள் தரப்பு இதனை மறுத்திருந்தது. ஊடகவியலாளர்கள் இங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் தகவல்களை சுயாதீனமாக உறுதிப்படுத்தமுடியவில்லை. இருதரப்புக்களுமே இவ்வாறான சம்பவங்கள் குறித்து ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியுள்ளன.

யுத்தம் முடிவடைந்துவிட்டதாகவும், பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ள நிலையில் முகாம்களிலுள்ள மக்கள் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியதாக கார்டியன் குறிப்பிடுகிறது. கார்டியனுக்குத் தெரிந்த மூன்றாம் தரப்பு ஒன்றின் மூலமாக இந்தத் தகவல்கள் பெறப்பட்டதாகவும், பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது.

ஒழுங்கான வைத்தியசாலை இல்லை

காயப்பட்டவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும் சிகிச்சையளிப்பதற்கு புதுமாத்தளன் பகுதியில் ஒழுங்கான வைத்தியசாலையொன்று இருக்கவில்லையென சுகாதார அதிகாரியான சிவா என்பவர் கூறினார்.

“ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் கடுமையான மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலான நோயாளர்கள் நிலங்களிலேயே படுத்திருந்தனர். உடனடியாக எழும்புவதற்கு அவர்களிடம் திராணி இருக்கவில்லை. அன்றிரவு நீரில்மூழ்கி 10 பேர் உயிரிழந்தனர்” என்றார் அவர்.

இராணுவத்தினர் முன்னேறி வரும் நிலையில், தமது கட்டுப்பாட்டிலுள்ள பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு எவ்வாறு விடுதலைப் புலிகள் பொதுமக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்பதையும் சிவா விபரித்தார்.

“ஏப்ரல் 24ஆம் திகதி இராணுவத்தினர் பாதுகாப்பு வலயத்தை உடைத்துக்கொண்டு உள்நுழைந்துவிட்டார்கள். அவர்கள் பதுங்கு குழிகளின் விழிம்புகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திக் கொண்டு, யார் உள்ளே இருக்கிறார்கள் என அதற்குள்ளிருந்த எம்மிடம் கேட்டனர். பொதுமக்களே உள்ளோம் என்று நாம் கத்தினோம். பின்னர் அவர்கள் எமக்கு வழித்துணை வழங்கி அழைத்துச் சென்றனர்” என்றார் சிவா.

இராணுவத்தினரால் தாம் அழைத்துச் செல்லப்பட்ட போது விடுதலைப் புலிகள் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தமக்கு ஏற்பட்ட அச்சம் மிகுந்த அனுபவத்தை அவர் விபரித்தார். இரணைப்பாலைக்குளம் பகுதியிலேயே இராணுவத்தினரின் முதலாவது சோதனைச் சாவடி இருந்ததாகவும், அங்கு தமது ஆடைகள் அனைத்தையும் களையுமாறு கோரி சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பின்னர், தாம் அங்கிருந்து ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு அழைத்துவரப்பட்டதுடன், விடுதலைப் புலிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் வேறாக்கப்பட்டதாகவும் கூறினார்.

இராணுவத்தினர் தம்மை மரியாதையுடனும், கௌரவமாகவும் நடத்தியதாகக் கூறும் சிவா, தமக்கு உணவு மற்றும் நீர் போன்றவற்றை வழங்கியதாகத் தெரிவித்தார். “இதனை நாம் எதிர்பார்க்கவில்லை” என்றார் அவர்.

இதேவேளை, ஐந்து பிள்ளைகள் மற்றும் நான்கு பேரப்பிள்ளைகளுடன் நெஞ்சளவு நீருள்ள பகுதியைக் கடந்து, ஏப்ரல் 25ஆம் திகதி வவுனியா மெனிக் பார்ம் முகாமுக்கு வந்ததாக 58 வயது யுவதியொருவர் கூறினார்.

“அது மிகவும் பயங்கரமானது என்பதுடன் மிகவும் கடினமானது. ஆனாலும், எனது பேரப்பிள்ளைகளுக்காக நான் அதனைச் செய்தேன். அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என நான் விரும்பினேன்” என்றார் அவர்.

“எனது ஐந்து பிள்ளைகளையும், நான்கு பேரப்பிள்ளைகளையுமே என்னால் காப்பாற்ற முடிந்தது. ஏனைய மூன்று பிள்ளைகளுக்கும் மேலும் மூன்று பேரப்பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. ஷெல் தாக்குதல்களின் போது நாங்கள் பிரிந்துவிட்டோம். எப்போது நான் அவர்களைச் சந்திப்பேனோ தெரியாது” என அந்த யுவதி கண்ணீருடன் கூறினார்.

நலன்புரி நிலையங்களின் நிலைமை

இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களின் நிலைமை தொடர்பாக விளக்கிய கோதை என்பவர், பணம் உள்ளவர்கள் மாத்திரமே நீரைப் பெற்றுக்கொள்ளமுடிவதாகக் கூறினார். தனது ஒரு பிள்ளை தற்காலிக கூடாரத்துக்கு வெளியே தரை விரிப்பொன்றின் மீது தூங்கிக்கொண்டிருப்பதாகவும், தனது பிள்ளை கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

முகாம்களில் காணப்படும் சுகாதாரமற்ற சூழ்நிலையாலேயே தனது பிள்ளைக்கு நோய் ஏற்பட்டதாக அந்தத் தாய் கவலையுடன் தெரிவித்தார்.

“நிலைமை மிகவும் இக்கட்டாகவே உள்ளது. எனது பிள்ளைகள் உணவு மற்றும் தண்ணீரும் தருமாறு கெஞ்சுகிறார்கள். அதனைப் பார்க்கும்போது மரணவேதனை ஏற்படுகிறது. நாம் வித்தியாசமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். எமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை” என அந்தத் தாய் கவலையுடன் கேள்வியெழுப்பினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலுப்பிள்ளை – பார்வதியின் கடைசி மகன் “பிரபா”வின் கசப்பான வரலாறுகள்..
Next post கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதிய இராணுவத் தளங்கள்..