131 கிலோ எடையுள்ள 15 குண்டுகள் வவுனியாவில் மீட்பு
131 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த 15 குண்டுகளை வவுனியா கந்தபுரம் காட்டுப் பகுதியிலி ருந்து பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். ஒவ்வொன்றும் ஒன்பது கிலோ எடையுள்ள இந்த குண்டுகள் வான்களுக்கு பொருத்தக்கூடியவைகள் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து கந்தபுரம் காட்டுப் பகுதியில் பாரிய தேடுதல்களை மேற்கொண்ட பொலிஸார் இந்த குண்டுகளை மீட்டெடுத்துள்ளனர். சிவப்பு மற்றும் கறுப்பு நிற இரண்டு பரல்களில் மறைக்கப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்த குண்டுகளுடன் பெருந்தொகையான வயர்கள் மற்றும் வெடிக்க வைக்கும் கருவிகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் நோக்குடன் இந்த குண்டுகள் புலிகளால் ஏற்கனவே மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். குண்டு மீட்டெடுக்கப்பட்ட பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார் பலரது வாக்கு மூலங்களை பதிவுசெய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எஸ். எஸ். பி. தெரிவித்தார்.
Average Rating