பிரபாகரனின் பெற்றோர் உறவினர்களுடன் சேரத் தடை!!
பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை (76), தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் வவுனியாவில் அரசு நடத்தும் அகதிகள் முகாமில் தனியாக தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை இதர உறவினர்களுடன் சேர அனுமதிப்பதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதைத் தெரிவித்த ராணுவத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் உதய நாணயக்கார, அவர்களுடைய பாதுகாப்பு கருதியே இப்படி தனியாக பிரித்து வைக்கப்படுகின்றனர் என்று கொழும்பில் சனிக்கிழமை தெரிவித்தார். ஆனால் அதை அவர் மேற்கொண்டு விவரிக்கவில்லை. அகதிகள் முகாமில் உள்ள முதியவர்கள் முதுமையாலும் பல்வேறு வியாதிகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு உதவிகள் செய்யும் அளவுக்கு முகாம்களில் மருத்துவ வசதிகள் இல்லை. எனவே அவர்களை அவரவர் மகன், மகள், இதர உறவினர்களுடன் சேர்ந்து தங்க அனுமதிப்பது என்று அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் பிரபாகரனின் பெற்றோர் மட்டும் பிற உறவினர்களுடன் சேர முடியாமல் தனித்து வைத்தே பராமரிக்கப்படுவர் என்று தெரிகிறது. முகாமில் பிரபாகரனின் தந்தை ஒரு பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், தாயார் சாவதானமாக இருக்கிறார் என்று காட்டும் புகைப்படங்கள் கொழும்பு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. பிரபாகரனின் பெற்றோருடன், போரில் உயிரிழந்த பிற விடுதலைப் புலிகளின் குடும்பத்தவரும் தங்கியிருக்கின்றனர். பிரபாகரனின் இதர உறவினர்கள், உயிரிழந்த பிற விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் உறவினர்களுடன் சேர்த்து தங்க வைக்கப் பட்டுள்ளனர். இத்தகவல்களை “தி ஐலண்ட்’ பத்திரிகைத் தெரிவிக்கிறது.
Average Rating