கேள்விமேல் கேள்வி கேட்டு கருணாநிதியை திணறடித்தார் ஜெயலலிதா, ஜான்சி ராணியை போல் துணிச்சல் மிக்கவர் வைகோ பாராட்டு
சட்டசபையில் ஜெயலலிதா தனியாக சென்று வாதாடி ஜான்சிராணியின் துணிச்சலை வெளிப்படுத்தினார் என்று வைகோ பாராட்டினார்.
தேவைப்படும் நேரத்தில் சட்டசபைக்கு வருவேன், கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 60 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சூழ்நிலையில் தனி ஒரு ஆளாக ஜெயலலிதா சட்டசபைக்கு சென்றிருக்கிறார்.
புள்ளி விவரங்களுடன் கேள்விகளை கேட்டு முதல்-அமைச்சர் கருணாநிதியையும், அமைச்சர்களையும் திணறடித்து இருக்கிறார். அவர் ஜோன் ஆப் ஆர்க் ஜான்சிராணி போல் துணிச்சலின் வடிவம். அவருடைய துணிச்சல், தைரியம், திறமை, சாதுர்யம், புத்திக் கூர்மை யாருக்கும் வராது.
தமிழகத்தில் 86 லட்சம் விவசாய தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக இருந்தால் ஒரு கோடியே 72 லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படுமே, தமிழகத்தில் எங்கே அவ்வளவு நிலம் இருக்கிறது? அரசிடம் 3 லட்சம் நிலம் ஏக்கர் நிலம்தானே உள்ளது என்று புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு கேள்விகளை கேட்டு ஆளுங்கட்சியினரை திணறிடித்தாரே இதற்கு அவர்களால் பதில் கூற முடிந்ததா?
இனிதான் கணக்கெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள். நீங்கள் ஏன் கணக்கெடுக்கிறீர்கள் நாங்கள் தான் கணக்கெடுத்து வைத்து இருக்கிறோமே என்று புள்ளி விவரங்களை அடுக்கடுக்காக எடுத்து கூறி தனி ஒரு ஆளாக நின்று கேள்விமேல் கேள்வி கேட்டு ஆளுங்கட்சியினரை திணறிடித்தாரே? அவர்களால் பதில் கூற முடிந்ததா?
7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு கடன் தள்ளுபடி என்று கூறியிருக்கிறீர்கள். முறையாக கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு அவர்கள் கட்டிய பணத்தை திருப்பி கொடுப்பது எப்போது என்று கேள்வி கேட்டாரே? அதற்கு உங்களால் பதில் கூற முடிந்ததா? வர்த்தக வங்கிகளிலும், தேசிய வங்கிகளிலும் கடன் வாங்கிய விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை யார் தள்ளுபடி செய்வது என்ற கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடிந்ததா?
ஜெயலலிதாவின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினீர்களே அத்தனை பேரையும் ஓரே ஆளாக மாறி மாறி சமாளித்தாரே. ஜெயலலிதா பேசியபோது குறுக்கீடு செய்த காங்கிரஸ் உறுப்பினரை பார்த்து நீங்கள் அமைச்சரா அல்லது அமைச்சராக போகின்றீர்களா? என்று கேள்வி கேட்டு பதிலடி கொடுத்தாரே அந்த சாதுர்யம் யாருக்கு வரும்.
இந்திய சட்டசபை வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடைபெற வில்லை. தனி ஒரு ஆளாக அத்தனைபேரையும் சமாளித்த சம்பவம் இது ஒன்றுதான். அந்த பெருமை ஜெயலலிதாவைத்தான் சாரும்.
இவ்வாறு வைகோ கூறினார்.