இடம்பெயர்ந்தோரை அடைமழைக்கு முன்னர் மீள் குடியேற்ற துரித நடவடிக்கை
அடைமழைக்கு முன்னதாக இடம்பெயர்ந்த மக்களை இயன்றளவு துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (19.08.2009) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்காக துரிதமாக மீள்குடியேற்ற வேண்டிய மக்களை இனம்கண்டு வருவதோடு அடைமழைக்கு முகம் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நிவாரணக் கிராமங்களின் நிலைவரம் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும், தெரிவித்துள்ளது. மழை காரணமாக, இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தவுடன் இரவோடு இரவாக அந்த மக்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அந்த மக்களுக்கு உணவு மற்றும் வசதிகள் துரிதகதியில் அளிக்கப்பட்டன. தற்போது நிலைமை முற்றாக சுமுகமடைந்துள்ளதால் அவர்கள் முன்பு இருந்த முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறு எதிர்க்கட்சி எம்.பி. க்கள் பலரும் தெரிவித்திருந்தனர். அந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்றுவதில் நாம் மிகவும் கரிசனையாக உள்ளோம். 2007 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முசலி பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கடந்த வாரம் மீள்குடியேற்றப்பட்டனர். வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் 15 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 42 ஆயிரம் பேர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு யாழ். அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அவர்களின் இருப்பிடங்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்கள் உடனடியாக மீள்குடியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Average Rating