காலே டெஸ்ட்-அதிக மெய்டன்கள் வீசி “முரளி” சாதனை
காலே டெஸ்டில் இலங்கை வீரர் முரளிதரன் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். நியூசிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து, பாலோ-ஆனை தவிர்த்தது. இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் காலேவில் நடந்து வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 452 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. துவக்க வீரர் மெஷின்டோஷ் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இவர் 69 ரன்கள் எடுத்த நிலையில் அனுபவ முரளியின் சுழலில் சிக்கி வெளியேறினார். நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்சின் 79வது ஓவரை முரளிதரன் வீசினார். முரளி அசத்தலாக வீச, நியூசிலாந்து வீரர் ஓரமினால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. இதையடுத்து இந்த ஓவர் மெய்டன் ஆனது. இதன்மூலம் முரளி டெஸ்ட் போட்டிகளில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியவர் என்ற சாதனை படைத்தார். 129வது டெஸ்டில் விளையாடும் முரளி 1752வது மெய்டன் ஓவர்கள் வீசியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்ன் 145 டெஸ்டில், 1751 மெய்டன் ஓவர்கள் வீசியதே சாதனையாக இருந்தது. ஜீதன் படேல் 26, ரோஸ் டெய்லர் 35, ஜெசி ரைடர் 42 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து, பாலோ-ஆனை தவிர்த்தது.
Average Rating