வன்னியிலிருந்த புலிகளின் வான்படைத் தளங்களுக்கு இலங்கை வான் படைத் தளபதி திடீர் விஜயம்
கிளிநொச்சி, முல்லைத்தீவி ஆகிய பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வான்படைக்கான தளங்கள், மற்றும் ஓடுபாதைகள் அமைந்திருந்த இடங்களை இலங்கையின் வான் படைத் தளபதி எயர் மார்ஷல் ரொசான் குணதிலக்க திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேரில் பார்வையிட்டார். வன்னிப் பிராந்தியம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுப் பகுதியிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் தமது வான்படைக்கான ஓடுபாதைகளை விடுதலைப் புலிகள் அமைத்திருந்தார்கள். அரசாங்கப் படையினர் இந்தப் பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததை அடுத்து இந்த விமான ஓடுபாதைகளைப் புனரமைத்து தமது வான்படைத் தளங்களை அந்த இடங்களில் அமைத்துள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய அதே ஓடுபாதைகளைத்தான் இலங்கை வான் படையினரும் இப்போது பயன்படுத்திவருகின்றனர்.விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்கிய போது ஓடுபாதைகள் சேதமடைந்திருந்ததாகவும், இருந்த போதிலும் தாம் அந்தப் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் குறிப்பிட்ட ஓடுபாதைகளை இலகுரக வானூர்திகள் பயன்படுத்தக் கூடிய விதமாக திருத்தியமைத்திருப்பதாகவும் இலங்கை வான்படையினர் தெரிவித்துள்ளனர்.இந்தப் பகுதியில் வான்படைக்கான முகாம்களை அமைத்து அவற்றைப் பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேலைகளைப் பார்வையிட்ட இலங்கை வான்படைத் தளபதி, இங்கு பணிபுரியும் முக்கிய அதிகாரிகளுடனும் அது குறித்து பேச்சுக்களையும் நடத்தியுள்ளார். இங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் குறித்தும் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Average Rating