உயர்தரப்பரீட்சை வினாத்தாளில் இனரீதியான கேள்வி: ஐ.தே.க.
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான கேள்விகள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த முறை சிங்களமொழி வினாத்தாளில் இராணுவ நடவடிக்கைகள் மூலம் விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டமை மற்றும் ஈழக் கோரிக்கையின் மூலம் விடுதலைப் புலிகள் தீர்வுகாண விரும்பியதன் பின்னணி போன்றவற்றை உள்ளடக்கியதாகக் கட்டுரையொன்றுக்கான தலைப்பு வழங்கப்பட்டிருந்ததாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “ஈழக் கோரிக்கைக்கும் அப்பால் செல்வதே விடுதலைப் புலிகளின் இலக்காக இருந்தது என்பது மனிதநேய இராணுவ நடவடிக்கையின் போது அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் பறைசாற்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. இதில் உங்களின் அவதானிப்பு என்ன” என்பதே அந்த வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்வியெனவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான கேள்விகள் இனவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாகவும், இந்தக் கேள்விக்குத் தமிழ் மாணவர்கள் பதிலளிக்கும்போது என்ன நினைப்பார்கள் எனவும் காரியவசம் சுட்டிக்காட்டினார். பரீட்சைக்கும் தோற்றும் மாணவர்களில் மோதல்களால் பாதிக்கப்பட்ட பல தமிழ் மாணவர்கள் தமது உறவுகளையும், நண்பர்களையும் இழந்த நிலையில் இவ்வாறான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போது அவர்களின் மனோநிலை எவ்வாறு இருக்குமெனவும் அவர் கேள்வியெழுப்பினார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் இந்தக் கேள்வியை எழுப்பும்போது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இருந்தபோதும் இதற்கு எந்தவிதமான பதிலையும் வழங்கவில்லை.
Average Rating