முரளி சுழலில் வீழ்ந்து நியூசி.. -202 ரன்களில் இலங்கை வெற்றி
காலே டெஸ்டில் முரளிதரன் சுழலில் சிக்கிய நியூசிலாந்து அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைடந்தது. இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் காலேவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 452, நியூசிலாந்து 299 ரன்கள் எடுத்தன. இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு தில்ஷன் சதம் கடந்து கைகொடுத்தார். இலங்கை இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு 413 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. இதையடுத்து விக்கெட்டை காப்பாற்றி ஆட்டத்தை டிரா செய்யும் நினைப்புடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆனால், அந்த அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. முன்னணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக வெளியேறினர். இந்நிலையில் 7வது வீரராக வந்த ஜெசி ரைடர், கேப்டன் வெட்டோரியுடன் சேர்ந்து அணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். வெட்டோரி (67) அரைசதம் கடந்தார். இந்நிலையில் பந்துவீச வந்த முரளி இந்த கூட்டணியை பிரித்தார். முரளியின் சுழலில் ரைடர், ஜீதன் படேல், ஓபிரைன் விக்கெட்டை பறிகொடுத்தனர். நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இலங்கை 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முரளிதரன் முதல் இன்னிங்சில் 4, இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் என 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருது தில்ஷனுக்கு வழங்கப்பட்டது.
Average Rating