முகாம்களில் இருந்து 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற தளபாட வசதிகளற்ற மாணவர்களுக்கு சேவ்த சில்ரன் நிறுவனம் கார்போர்ட் வழங்கியது
இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற தளபாட வசதிகளற்ற மாணவர்களுக்கு சேவ்த சில்ரன் நிறுவனம் கார்போர்ட்களை வழங்கியிருப்பதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்,ஏ.ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார். பரீட்சைத்திணைக்களத்தின் புள்ளிவிபரத் தகவல்களின்படி வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 5943 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன்படி 212 மாணவர்கள் யாழ் மாவட்டப் பரீட்சை நிலையங்களிலும், வவுனியாவில் 5731 மாணவர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். வவுனியா இடைத்தங்கல் முகாம்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வவுனியா தெற்கு வலயலக் கல்வித் திணைக்களத்தைச் சேர்ந்த ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களினால் கல்வியூட்டப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார். இதைவிட கல்வி அமைச்சு அதிகாரிகளினால் பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த ஆசிரியர்கள் விசேடமாகப் பயிற்றப்பட்டு, அவர்களின் ஊடாக இந்த மாணவர்கள் பரீட்சைக்குத் தயார் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பரீட்சைத் தினத்தன்று இந்த மாணவர்களுக்கு கறி பணிஸ் மற்றும் மைலோ பக்கட் என்பன சிற்றுண்டியாக வழங்கப்பட்டதாகவும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating