முக்கியமான தருணங்களில் இலங்கைக்கு சீனா ஆதரவாக இருந்துள்ளது -அரசாங்கம்
இலங்கையின் அபிவிருத்தியில் சீனா பிரதான பங்குதாரர் என்று வர்ணித்திருக்கும் இலங்கை அரசாங்கம், முக்கியமான தருணங்களில் இலங்கைக்கு சீனா ஆதரவாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அண்மைய காலங்களில் இலங்கைமீது சில சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டநிலையில் சீனா எமக்கு ஆதரவு வழங்கியது என்று ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி. கூறியுள்ளார். வடமேல் மாகாணத்தில் சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட அனல்மின் உலையின் முதற்கட்ட நிறைவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்தியில் பிரதான பங்குதாரராக சீனா இருப்பதாக அவர் கூறியுள்ளார். முக்கியமான தருணங்களில் இலங்கைக்குச் சீனா உதவ முன்வந்துள்ளது என்று குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ, அனல்மின் உலைத்திட்டத்திற்காக 455மில்லியன் டொலர் நிதியுதவி அளித்ததற்காக பெய்ஜிங்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்படும் இந்த அனல்மின் உலையின் முதல் கட்டப்பணி பூர்த்தியடைந்திருப்பதுடன் அடுத்த வருடம் முதல் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீதிகள், புகையிரதப் பாதைகள், துறைமுகங்கள் மற்றும் ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்ய சீனஅரசு நிதியுதவி அளிதிருப்பதாகவும் பசில் கூறியுள்ளார். நுரைச்சோலை அனல்மின் உலை முதற்கட்டப் பணிபூர்த்தியடைந்துள்ளநிலையில் இதன்மூலம் நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தின் 25சதவீதம் பூர்த்தி செய்யப்படுமென்றும் பசில் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.
Average Rating