களுபோவில வைத்தியசாலையில் உடல்எடையைக் குறைக்க சிகிச்சை பெற்ற யுவதி உயிரிழப்பு!
களுபோவில பொது வைத்தியசாலையில் தனது உடல்எடையைக் குறைக்க யுவதியொருவர் சிகிச்சை மேற்கொண்டபோது அவருக்கான சத்திரசிகிச்சையில் அவர் உயிரிழந்துள்ளதாக களுபோவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இரத்தினபுரி நகர எல்லையைச் சேர்ந்த சமகிபுர, ஷாலிகா என்.குணரட்ன (வயது 28) என்ற யுவதியே உயிரிழந்தவராவார். இந்தயுவதி கடந்த 14ம் திகதி, தனது உடல் எடையைக் குறைப்பதற்காக களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அன்றுமாலை இவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், இவர் சுயநினைவினை இழந்த நிலையில் தொடர்ந்து அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காது 19ம் திகதி அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்ததாக உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்துள்ளார். இது குறித்து களுபோவில மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரது இந்த சிகிச்சைக்காக 33ஆயிரம் ரூபா வைத்தியருக்கு செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே யுவதி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் திருமணமாகாதவர், அழகு நிலையம் நடத்துபவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating