திருமலையில் விவசாயம் மேற்கொள்ளப்படாதிருந்த பத்தாயிரம் ஏக்கரில் பயிர்ச்செய்கை
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் விளைவாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 வருடங்களாக விவசாயம் மேற்கொள்ளப்படாதிருந்த பத்தாயிரம் ஏக்கர் விவசாய விளைநிலத்தில் இம்முறை பெரும்போக விவசாயம் மேற்கொள்வதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கைவிடப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்வது தொடர்பான கூட்டம் மாகாண முதலமைச்சர் தலைமையில் திருகோணமலையில் நடைபெற்றுள்ளது. விவசாயத்துக்கான பாதுகாப்பு தரப்பினரின் அனுமதி கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறுகிறார். திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு (உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசம்) தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களிலும் எதிர்வரும் பெரும் போக வேளாண்மைச் செய்கையை விவசாயிகள் வழமை போல் மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் அனுமதி அளித்துள்ளனர். கடந்த வாரம் கிழக்க மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்,மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் அடங்கிய குழுவினர் திரியாய் நீர்ப்பாசன திட்டத்தின் கீழுள்ள நீலப்பனிக்கன் குளத்தை பார்வையிடச் சென்ற போது விவசாயிகள் பாதுகாப்பு தரப்பினரால் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர்களிடம் எடுத்துக்கூறினர். இதனையடுத்து நேற்று திருகோணமலை மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது தொடர்பான சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் விவசாயிகள் வழமை போல் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும் எனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Average Rating