வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தை!
வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்கி அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்வது குறித்து சர்வதேச மட்டத்தில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். சர்வதேச மட்டத்தில் வியாபித்திருக்கும் புலிகளின் வலைப்பின்னல்களை தடைசெய்வது குறித்து தூதுவர்களுடன் பேச்சு நடத்திவரும் அதேநேரம் வெளிநாடுகளிலிருக்கும் புலிகளின் சொத்துக்களை இனங்கண்டு அவற்றின் உரிமைகளை இலங்கை அரசாங்கத்தின் கரங்களுக்கு கிட்டும்படி செய்ய அந்நாடுகளின் அரசாங்கங்கள் உதவ முன்வர வேண்டுமெனக் கோரி உலகநாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் பிரத்தியேகமாக எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பயங்கரவாதமென்பது தனியே ஒரு நாட்டிற்குள் மாத்திரம் கட்டுப்பட்டதல்ல. சர்வதேசம் முழுவதும் பரவி காணப்படுவதொன்றாகும். புலிகள் சர்வதேச வலையமைப்பை கொண்டிருப்பது மாத்திரமன்றி எமது அண்டைய நாடான இந்தியாவின் முன்னாள் பிரதமரையே கொலை செய்துள்ளனர். புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் செயற்பட்டு வருகின்றது. அதனை தடைசெய்து வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்களை முடக்குவது குறித்து நாம் தொடர்ந்தும் சர்வதேசமட்டத்தில் பேச்சுகளை நடத்தி வருகின்றோம். உலக நாடுகளும் எமது கோரிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள். அதனை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவிகளினூடாக காணக்கூடியதாக இருக்கின்றதெனவும் அமைச்சர் போகொல்லாகம மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating