(புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்து மரணமான) மே 17 முதல் அரசியல் இயக்கமாக மாறுவோம் -சீமான்
நாம் தமிழர் அமைப்பு வரும் மே 17-ம் தேதி முதல் அரசியல் இயக்கமாக மாறும் என்று இயக்குநர் சீமான் அறிவித்துள்ளார். தூத்துக்குடி யில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு இயக்குநர் சீமான் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு வரவேற்றார். இக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசியதாவது: என்னை யாரும் தலைவர் என்று அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் திரும்பவும் படம் எடுக்கச் சென்றுவிடுவேன். நம்முடைய நோக்கத்திற்காக நாம் தமிழர் ஆக ஒன்றிணைந்து போராடுவோம். அரசியல் சாக்கடைகளைப் பற்றி நாம் பேசி நமது நேரங்களை வீணடிக்க வேண்டாம். நமக்கு நிறைய கடமைகளும் பணிகளும் காத்திருக்கின்றன. எழுச்சிமிக்க இளைஞர் பாசறையாக இது செயல்படும். சீருடை இல்லாத ராணுவமாக நம் இயக்கம் செயல்படும். திராவிட இயக்கத்தின் பெயரைக் கூறி, இங்குள்ள அரசியல்வாதிகள் கட்சி நடத்தி வருகின்றனர். இங்கு யாரும் திராவிடன் அல்ல. இங்கு இருப்பது எல்லாமே தமிழன்தான். தமிழன் அல்லாதவர் கட்சித் துவங்கும்போது திராவிடம் தேவைப்படுகிறது. இலங்கைப் பிரச்சனையில் ஒரே ஒரு தலைவன்தான் ஆதரவாகச் செயல்பட்டார். அதுதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு இருக்கிறதா? தடை செய்யப்பட்டது சரிதானா? என்றும் வாக்கெடுப்பு நடத்தினால் 90%பேர் தமிழர்கள் ஆதரவாக வாக்களிப்பார்கள். அதை நடத்த இந்த அரசு தயாரா? இலங்கைக்கு உதவிவரும் இந்திய பேரரசு தற்போது 1000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த பணத்தில்தான் ராணுவத்திற்கு சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. போர் முடிந்து 3 மாத காலம் ஆகியும், முள்வேலிக்குள் சிக்கிக் கிடக்கும் தமிழர்களின் நிலை பற்றி, தமிழக அரசியல்வாதிகள் மவுனமாக இருக்கின்றனர். மத்திய அரசும் மெளனம் சாதிக்கிறது. போர் முடிந்ததும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும் என்ற பேச்சு, தற்போது எழவில்லை. இந்திய பேரரசு ஒருநாள் இதற்காக கவலைப்படும் காலம் வரும் என்றார் சீமான்.
Average Rating