தமிழ்ப்பெண் ஒருவர் விசாஇல்லாமல் பிரிட்டனுக்குச் செல்வதற்கு பிரிட்டிஷ் தூதரகம் உதவி
இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் விசாஇல்லாமல் கொழும்பிலிருந்து பிரிட்டனுக்குச் செல்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் உதவிசெய்தமை தெரியவந்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கின்றது. குறித்த யுவதி பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபட்டவரா, பிரிட்டிஷ் தூதரகம் இவ்வாறு மேலும் பலருக்கு விஸா இன்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுகின்றன. அரசு இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் பீட்டா ஹெய்ஸை நேரில்அழைத்து இது குறித்து விளக்கம் கோரியுள்ளார். அங்கையற்கன்னி கிருஸ்ணபிள்ளை என்ற 40வயது பெண்ணுக்கே பிரிட்டிஷ் தூதரகம் இவ்வாறு உதவியுள்ளது என வாராந்த அமைச்சரவை மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்ததுடன் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சரைப் பணித்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் எல்லை முகவர் அமைப்பைச் சேர்ந்த இராஜதந்திர அந்தஸ்துள்ள சோர்னா குருக்ஸ் என்னும் அதிகாரியே குறிப்பிட்ட பெண்ணுக்கு உதவினார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த பெண்ணுக்கு விசாவை பிரிட்டிஷ் தூதரகம் வழங்கவில்லை. அதேவேளை, அவர் நேரடி விமானத்தில் அந்த நாட்டுக்குச் செல்வதற்கான உதவிகளைத் தூதரகம் செய்துள்ளது. அவருக்கு உதவுவதற்காக இராஜதந்திரியொருவரைத் தூதரகம் விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Average Rating