பால் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்யவே புதிய சட்டங்கள்..
பால் தரும் மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதன் மூலம் நாட்டின் பால் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படுகின்றது இதனைத் தடுப்பதற்காகவே புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அச்சட்டங்கள் பால்மாடுகளை அறுப்பது மற்றும் அதற்குரிய தண்டனைகள் பற்றியே குறிப்பிடுகின்றது என கால்நடைகள் வள பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்துள்ளார். கால்நடை வள அபிவிருத்தி அமைச்சின் புத்தளம் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட செயலாளர் பொலிஸ் உயரதிகாரிகள், உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள், மிருக வைத்தியர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பால்தரும் மாடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர. இறைச்சிக்கடைகளை மூடிவிடுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. எனவே, ஏனைய மாடுகளை மற்றும் பிராணிகளை அறுப்பது பற்றி அச்சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. இறைச்சிக் கடைகளில் மாடுகளையோ அல்லது பால்தர முடியாத நிலையில் இருக்கின்ற பசுமாடுகளையோ அறுப்பதில் எந்தவிதப் பிரச்சினைகளும் கிடையாது. ஆனால் காளைமாடுகள் என்ற பெயரில் பசுமாடுகள் மற்றும் எருமை மாடுகளை அறுக்கின்ற போதே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படுகின்ற பிரச்சினைகளின் பின்னர். காளைமாடுகளை அறுப்பது கூட குற்றமாகப் பார்க்கப்படுகின்றது. இதனாலேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த நாட்டுக்குள்ளே தற்போது சட்டம் ஒழுங்கை நூற்றுக்கு நூறுவீதம் கடைப்பிடிப்பதற்கான முஸ்தீபுகள் தென்படுகின்றன. அதனை அமுல்படுத்துவதற்கான முயற்சியிலேயே ஜனாதிபதியின் அரசாங்கம் பொலிஸ் இராணுவம் மற்றும் கடற்படை ஏனையோரும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர் இந்நிலையில் இறைச்சிக்கடைகளில் மாட்டிறைச்சி விற்பனையின் போது சரியான சட்டங்களை கடைப்பிடிக்கின்ற போது பிரச்சினைகள் எழாமல் தடுக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating