நலன்புரி நிலையங்களில் காணாமல் போயுள்ளதாக நாளாந்தம் 25முதல் 30 முறைப்பாடுகள்!
வவுனியா நலன்புரி நிலையங்களில் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி நாளாந்தம் 25முதல் 30 முறைப்பாடுகள் அஞ்சல் வழியாக வந்து கிடைப்பதாக வவுனியா பிராந்திய மனிதஉரிமைகள் ஆணைக்குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவினர் இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம் செய்து இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்துகொள்வதற்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதையடுத்தே, முகாம்களில் இருந்து இவ்வாறு தமக்கு முறைப்பாடுகள் வரத் தொடங்கியிருப்பதாகவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினால், அங்கிருந்த மக்கள் நெருக்கடிகள் மிகுந்த சூழ்நிலையில் இடம்பெயர்ந்தபோது பலர் தமது உறவினர்களை, பிள்ளைகளை, பெற்றோரை, உற்றாரைப் பிரிய நேர்ந்தமை தெரிந்ததே. அவ்வாறு பிரிந்த பலரது இருப்பிடத்தைத் தாம் அறியமுடியாதிருப்பதாகவும், அவர்கள் பற்றிய தகவல்களைத் தங்களால் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் இம்முறைப்பாடுகளில் குறிப்பட்டிருக்கிறது. இவ்வாறு காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு இந்த அஞ்சல்வழியான முறைப்பாடுகளில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறைப்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களும், பொதுமக்களும் மனித உரிமைகள் தொடர்பான தமது பிரச்சினைகள் குறித்து வவுனியா ரயில்நிலைய வீதியில் அமைந்துள்ள தேசிய மனிதஉரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரடியாகவோ அஞ்சல் வழியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும். அத்துடன் 024 2222029 என்ற தொலைபேசியுடன் அந்த அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating