மரணமான மஸ்கெலியா சிறுமிகள் இருவரையும் வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் கைது.. வீட்டு உரிமையாளரின் விளக்கமறியல் காலமும் நீடிப்பு
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்த மஸ்கெலியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருந்த வீட்டு உரிமையாளர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை மீண்டும் இம்மாதம் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் கடந்த செவ்வாய் கிழமை இரவு மஸ்கெலியா, நல்ல தண்ணீர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட, மேற்படி சிறுமிகளை வேலைக்கென கொழும்புக்கு அழைத்துச் சென்ற தரகர் மணிவண்ணன் நேற்று புதன்கிழமை ஹற்றன் மாவட்ட நீதிவான் சந்துன்விதான முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரையும் இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் மரணமான சிறுமி ஜீவராணியை வீட்டு வேலைக்கு அமர்த்தியிருந்த வீட்டு உரிமையாளர் தௌஸிக்கை பிணையில் விடுமாறு நீதிமன்றில் கோரப்பட்ட போது, மன்றில் ஆஜராகியிருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் ஆட்சேபனை தெரிவித்திரிந்ததோடு தரகர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிணை வழங்கப்படக்கூடாது எனவும் தெரிவித்திருந்தார்கள். மஸ்கெலியாவில் கைது செய்யப்பட்டுள்ள தரகர் மணிவண்ணன் எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றுக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்படவுள்ளார். மரணமடைந்த சிறுமிகளான சுமதி, ஜீவராணி ஆகியோரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் நீதிமன்றில் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் 17 ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டிருந்த இரண்டு சிறுமிகளின் உடலங்களும் 10 நாட்களின் பின்னர் சென்ற 27 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டு கண்டி வைத்திய சாலைக்கு மீண்டும் வைத்திய பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனையின் பின்னர் 28 ஆம் திகதி மீண்டும் அடக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Average Rating