சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்;புப்பிரிவு அமைக்க நடவடிக்கை
சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, அதனை கண்காணிக்கும் பொருட்டு விசேட புலனாய்வு பாதுகாப்பு;பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் திகதிமுதல் அமுலுக்கு வரும்வகையில் இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான கெனத் பெர்னாண்டோ, இந்த பிரிவுக்கு முழு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 45சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்டு இந்தப் புலனாய்வு பாதுகாப்புப்பிரிவு தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர், இந்தப்பிரிவின் நடவடிக்கைகளை வெகுவிரைவில் நாடளாவியரீதியில் அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.சில்வாவின் வழிகாட்டலில் ஆணையாளர்களான ஹப்புஆராய்ச்சி மற்றும் லக்ஷ்மன் சில்வா ஆகியோரின் தலைமையில் இந்த பரீட்சார்த்த நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளிலும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் புலனாய்வு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எந்தவொரு சிறைச்சாலைக்கும் திடீரென விஜயம் செய்யவும் சிறைக்கைதிகள் மற்றும் அதிகாரிகளை சோதனையிடவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விசேட புலனாய்வுப் பாதுகாப்பு பிரிவை நாடளாவியரீதியில் நிறுவுவதற்கென ஆயிரம் சிறைச்சாலை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்குள் பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், சட்டவிரோத செயற்பாடுகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் போதைவஸ்துக்கள் கைமாறப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுவதையடுத்தே இதனைக்கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்த பிரிவு நாடளாவிய ரீதியில் உருவாக்கப்படவுள்ளதுடன் தற்பொழுது இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தப் பிரிவின் பரீட்சார்த்த செயற்பாடுகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் இந்தப்புலனாய்வுப் பாதுகாப்புப்பிரிவு அமைக்கப்பட்டு அதன் செயற்பாடுகளை விஸ்தரித்த பின்னர் கண்டி, காலி, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சேவையை முன்னெடுக்க முடியும் என்றும் கெனத் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரிவின் செயற்பாடுகளின் மூலம் சிறைச்சாலைக்குள் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகளை இலகுவாகக்கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Average Rating