வண்டு காணப்பட்டதாகக் கூறப்படும் ஊசிமருந்து வகைகளை உடனடியாகப் பாவனையிலிருந்து நீக்கும்படி சுகாதார அமைச்சு பணிப்புரை
வண்டு காணப்பட்டதாகக் கூறப்படும் ஊசிமருந்து வகைகளை உடனடியாகப் பாவனையிலிருந்து நீக்கும்படி சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளது. இதேவேளை, இம்மருந்துக் குப்பிகள் தொடர்பாக பரிசீலனைகளை மேற்கொண்டு தமக்கு உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜித் மெண்டிஸ் தேசிய ஒளடதங்கள் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். கொழும்பு பெரியாஸ்பத்திரியில் ஊசிமருந்துக் குப்பிக்குள் வண்டு காணப்பட்டமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி விளக்கமளித்தது. இவ்விடயம் தொடர்பில் தற்போது சுகாதாரஅமைச்சு மிருந்த கவனம் செலுத்திவருகிறது. மேற்படி விவகாரம் தொடர்பில் நேற்று கொழும்பு, பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க சுகாதார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து மேற்படி மருந்துகளை பரிசீலனைக்கு உட்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அதற்கான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இம்மருந்து தொடர்பில் மேலும் பரிசோதனைகளை நடத்தும் பொறுப்பு தேசிய ஒளடதங்கள் அதிகாரசபைக்கும் தேசிய மருந்து தரச் சான்றுப்படுத்தல் அதிகாரசபைக்கும் வழங்கப்பட்டுள்ளன. மருந்துக் குப்பிக்குள் வண்டு இருந்தமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விசாரணைகளை மேற்கொள்வதுடன் அந்த மருந்தினை வழங்கிய நிறுவனத்திடமும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மேற்படி அதிகாரசபைகளின் பணிப்பாளர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்ட மருந்தையும் அதன் உள்ளடக்கச் சின்னத்தையும் பாவனையிலிருந்து விலக்குமாறும் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அஜித் மெண்டிஸ் கொழும்பு பெரியாஸ் பத்திரியின் பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்கவுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.
Average Rating