ரஷியா-உக்ரைன் எல்லையில் 13 இந்தியர்கள் பிடிபட்டனர் திருட்டுத் தனமாக நுழைந்தவர்கள்
திருட்டுத்தனமாக ரஷியாவுக்குள் நுழைந்த 13 இந்தியர்கள் ரஷிய – உக்ரைன் எல்லையில் பிடிபட்டனர். இங்கிலாந்து நாட்டுக்கு தரை வழியாகச் செல்வதற்காக ரஷியா சென்று அங்கு இருந்து உக்ரைன் நாட்டுக்குள் நுழைய முயன்ற 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரியான்ஸ்க் பகுதியில், கிளிமோவோ என்ற இடத்தில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களில் 13 பேர் இந்தியர்கள், 2 பேர் பாகிஸ்தானியர்கள், 3 பேர் வங்காளதேசத்தினர் மீதி 6 பேர் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் ரஷியா கடந்த வாரம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. அதன்படி, திருட்டுத்தனமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் ரஷியா வழியாக நுழைபவர்கள் பிடிபட்டால், அவர்களை ரஷியா திரும்ப ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் திருட்டுத் தனமாக நுழைபவர்களைப் பிடிப்பதில் ரஷியா தீவிரமாக உள்ளது.
இதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்து கொள்ள ரஷியா வலியுறுத்தி வருகிறது. இப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டால், விசா சட்டங்களை எளிமைப்படுத்துவதாகவும் ரஷியா கூறி உள்ளது.