தென்மேற்கு பருவ மழைக்கு 75 பேர் பலி!
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி தீபகற்ப இந்தியாவின் மேற்கு கரையோரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு 75 பேர் பலியாகியுள்ளனர். கேரளத்தில் 34 பேரும், கர்நாடகத்தில் 14 பேரும், மராட்டியத்தில் 2 நாட்களிலேயே 19 பேரும், குஜராத்தில் 8 பேரும் பலியாகியுள்ளனர்.
பத்து நாட்களுக்கு முன்னதாகவேத் துவங்கிய தென்மேற்குப் பருவ மழை, துவங்கிய இரண்டு நாட்களிலேயே பல மாநிலங்களை கதிகலங்கச் செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. சாலைகளிலும், தாழ்வானப் பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் பல இடங்களில் மின்சார சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.