ஐ.நா.சபை மியான்மர் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தல் சூகி யின் வீட்டுக்காவல் நீடிப்பு எதிரொலி
மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் சூகி யின் வீட்டுக்காவல் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டதை யொட்டி அந்தநாட்டின் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
மியான்மர் நாட்டில் ராணுவஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஜனநாயக ஆட்சிஅமைக்கப்படவேண்டும் என்று கோரி கடந்த 16 ஆண்டுகளாக போராடி வருகிறார் சூகி. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அவர் இத்தனை ஆண்டுகளாகப் போராடி வருகிறார். 16 ஆண்டுகளில் அவர் 10 ஆண்டுகள் சிறையில் கழித்தார். அவரை விடுதலை செய்யவேண்டும் என்று உலக நாடுகள் கோரி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை அவரை விடுதலை செய்யக்கோரி தீர்மானமே நிறைவேற்றியது.
உலகநாடுகளின் கோரிக்கையையும் ஐ.நா.தீர்மானத்தையும் காதில் போட்டுக்கொள்ளாமல் சூகியின் வீட்டுக்காவலை மேலும் ஒரு ஆண்டுக்காலத்துக்கு மியான்மர் அரசு நீட்டித்து உள்ளது. இது உலகநாடுகளுக்கு ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
மியான்மரின் இத்தகைய அலட்சிய நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா மியான்மார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா.சபையை வலியுறுத்தி உள்ளது.
சூகியை அநீதியாக வீட்டுச்சிறையில் அடைத்து வைத்து இருப்பதோடு பொருளாதார அரசியல் மற்றும் சுகாதாரநிலைமை சீர்குலைந்து போயிருப்பதும் அந்த நாட்டின் நிலைத்த தன்மைக்கும் அமைதித்தன்மைக்கும் ஆபத்தானது என்று அமெரிக்கா கூறிஉள்ளது.
ஐ.நா. சபையின் துணை பொதுச்செயலாளர் இப்ராகிம் கம்பாரி சமீபத்தில் மியான்மார் சென்று திரும்பினார். கடந்த 2 ஆண்டுகளில் மியான்மர் சென்ற ஒரே ஐ.நா. அதிகாரி கம்பாரி தான். அவர் மியான்மார் நிலவரம் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எடுத்துக் கூறினார்.