இந்தோனேசியா: படகிலிருந்து வெளியேற இலங்கைத் தமிழர்கள் தொடர்ந்து மறுப்பு
இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகிலிருந்து வெளியேற மாட்டோம் என அதில் உள்ள இலங்கைத் தமிழர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு 254 இலங்கைத் தமிழர்களுடன் மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்றபோது இந்த படகை இந்தோனேசிய கடற்படையினர் தடுத்து மேற்கு ஜாவாவுக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் படகை விட்டு வெளியேற தமிழர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். தங்களை ஆஸ்திரேலியா அல்லது வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எங்களால் இலங்கையில் வாழ முடியாது. அதுவரை நாங்கள் படகை விட்டு வெளியேற மாட்டோம். மீறி வெளியேற்ற முயன்றால் காஸ் சிலிண்டர்களைக் கொண்டு வெடிக்கச் செய்து அனைவரும் மாண்டு போவோம் என அவர்கள் கூறி வருகின்றனர். இதனால் இழுபறி நிலைமை நீடிக்கிறது. இந்த நிலையில், படகு மூலம் இவர்களை ஆஸ்திரேலியா வுக்கு அனுப்பி வைத்த இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழ் அகதிகளுக்கும், இந்தோனேசிய அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் எந்தப் பலனையும் தரவில்லை.
தமிழ் அகதிகள் குழுவின் செய்தித் தொடர்பாளர் போல செயல்படும் அலெக்ஸ் என்பவர் கூறுகையில், இலங்கையில் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கூட பலர் உயிரிழந்து கொண்டிருப்பார்கள்.
நாங்கள் இந்தப் படகில் இன்று பாதுகாப்பாக இந்தோனேசியக் கரையில் அமர்ந்திருக்கிறோம். ஆனால் லட்சக்கணக்கான எங்கள் மக்கள் தினசரி அங்கு செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவேதான் அங்கிருந்து பல நூறு பேர் தப்பி வெளிநாடுகளில் புகலிடம் கோரிக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் நடந்து வருவது இனப்படுகொலை. அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேறி உலக நாடுகளில்தான் தஞ்சமடைய நேரிடும் என்றார்.
Average Rating