எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சுவைத்து கொன்றுவிடுங்கள் ஐயா, நலன்புரி நிலைய மக்கள் திருமாவளவனிடம்..!
எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சுவைத்துக் கொன்றுவிடுங்கள் ஐயா என்று வவுனியா நலன்புரி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிலர் தம்மிடம் கூறி கதறி அழுததாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், முகாம் மக்களிடையே மன அழுத்தங்களும், அச்சமும் மோலோங்கி நிற்கின்றன. அங்குள்ள மக்கள் கால்வயிற்று கஞ்சிக்காக கையேந்தி நிற்கிறார்கள். மெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்றுவிடுங்கள் அய்யா என்று சிலர் எம்மிடம் கூறி கதறியழுதனர். 2பேர் மட்டுமே படுத்து எழக்கூடிய கூடாரங்களில் 10பேர்வரை மனிதாபிமான மற்ற முறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டை சொற்களால் விவரிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை சென்றிருந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் திருமாவளவன் கைகுலுக்கியதையும், அவருடன் ஆலோசனை நடத்தியதையும் பல்வேறு தமிழ் அமைப்புகள் முன்னர் குறைகூறி அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்நிலையில் இலங்கையிலிருந்து சென்னை திரும்பிய ஒருவாரத்துக்குப் பின்னர் இத்தகைய அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டுள்ளார் என்பது சுட்டிக் காட்டத்தக்கது.
Average Rating