புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் யாழ். விஜயம்..
புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா நகரபிதாவும், வவுனியா நகரசபையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான விசுபாரதி எனும் ஜி.ரி.லிங்கநாதன், புளொட் வவுனியா நகரசபை உறுப்பினரான எஸ்.குமாரசாமி, தமிழ்க்கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் சுரேந்திரன் வவுனியா நகரசபை செயலர் ஜெயராஜ் உள்ளிட்ட குழுவினர் இருநாள் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். இவர்களின் இந்த விஜயமானது 18ம் 19ம் திகதிகளில் அமைந்திருந்தது. வடமாகாண உள்ளுராட்சி திணைக்களத்தினால் யாழ். மத்திய கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கண்காட்சி நிகழ்விலும் இவர்கள் பங்குபற்றியிருந்தனர். உள்ளுராட்சி திணைக்களங்களின் செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், நகரசபை, பிரதேச சபைகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது காட்சிப்படுத்தப் பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட குறித்த நகரசபை உறுப்பினர்கள் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின்னர், முன்னாள் மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவர் திரு.சித்தார்த்தன் அவர்களின் தந்தையாருமான தர்மலிங்கம் அவர்களின் நினைவாலயம் சென்றதுடன், அங்குள்ள வாசல்ஸ்தலத்தில் தர்மலிங்கம் அவர்களின் துணைவியாரையும் சந்தித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும், யாழ். அரச அதிபர் கே.கணேஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரையும் இவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். பின்னர் யாழின் பிரசித்தி பெற்ற வணக்கஸ்தலங்களுக்கும், யாழ். பொது நூலகத்திற்கும், புங்குடுதீவு, நயினாதீவு உட்பட பல பிரதேசங்களுக்கும் இவர்கள் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating