ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம் விஜயா தாயன்பன் தி.மு.க.வில் இணைந்தார்
ம.தி.மு.க. மாநில மகளிர் அணிச் செயலாளர் விஜயா தாயன்பன் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
ம.தி.மு.க.வின் மாநில மகளிர் அணிச் செயலாளராக இருந்தவர் விஜயா தாயன்பன். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாநகர் தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கருணாநிதி தலைமையில் மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் நடந்த கண்ணகி சிலை திறப்பு விழாவில் விஜயா தாயன்பன் முதல் வரிசையில் அமர்ந்து கலந்து கொண்டார். இது கட்சியினர் மத்தியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.
இதையடுத்து, “ம.தி.மு.க. மாநில மகளிர் அணிச் செயலாளர் விஜயா தாயன்பன் கழக கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கருணாநிதி முன்னிலையில் ம.தி.மு.க. மாநில மகளிர் அணிச் செயலாளர் விஜயா தாயன்பன் தி.மு.க.வில் இணைந்தார். உடன் ம.தி.மு.க. சைதாப்பேட்டை பகுதி மகளிர் அணி அமைப்பாளர் வி. பிரேமாவும் இணைந்தார்.
அப்போது தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு நா. வீராசாமி, அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர்கள் எஸ்.ஏ.எம். உசேன், துறைமுகம் காஜா ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.