வெள்ளவத்தையின் பாமன்கடை பகுதி வீடொன்றுக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்பு
கொழும்பு, வெள்ளவத்தையின் பாமன்கடை பிரதேசத்திலுள்ள வீடொன்றிக்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 875கிறாம் எடைகொண்ட சி-4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றப்புலனாய்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே வெடிமருந்துகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல்மெதிவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் விசேட பொலிஸ் குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை வெள்ளவத்தை பிரதேசத்தில் கைதுசெய்துள்ளனர். இவர் வழங்கிய தகவலையடுத்து இவரது நண்பரான மற்றுமொரு நபரை பாமன்கடை பகுதியில் கைதுசெய்துள்ளனர். விசாரணைகளின் போது இரு சந்தேகநபர்களும் வழங்கிய தகவல்களை அடுத்து இரண்டாவது சந்தேகநபர் தற்காலிகமாக தங்கியிருந்த பாமன்கடை வீட்டின் முன் பகுதியில் இவ்வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
Average Rating