யாழில் அத்தியாவசியப் பொருட்கள் சகலதும் மிகக்குறைந்த விலையில் வழங்கப்படுகிறது
யாழ்ப்பாணத்தின் அனைத்து கடைகளிலும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சகலதும் மிகக்குறைந்த விலையிலேயே வழங்கப்படுகின்றன. குறிப்பாக சகல பால்மா பக்கற்றுக்களும் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் 10ரூபா குறைந்தே விற்கப்படுவதனை காணக்கூடியதாகவுள்ளது. அரிசி, சீனி, மா உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கொழும்பில் விற்கப்படும் அதே விலையிலோ அல்லது அதைவிட குறைவான விலையிலோ யாழ்ப்பாணத்தின் அனைத்துக் கடைகளிலும் பெற்றுக் கொள்ள கூடியதாகவுள்ளது. யாழ். சந்தையில் உற்சாகமான வியாபாரம் நடைபெற்று வருவதுடன் பொருள்கொள்வனவில் மக்கள் கூடுதல் ஆர்வம்காட்டி வருவதையும் காணக் கூடிதாகவுள்ளது. அரச மற்றும் தனியார் வங்கிக்கிளைகள் இங்கே ஏராளமாக திறக்கப்பட்டுள்ளன. பொருள் கொள்வனவில் மக்கள் காட்டும் ஆர்வம் குறித்தும் வியாபார முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் வியாபாரிகள் பூரண திருப்தியை தெரிவிக்கின்றனர். வீதிகளிலிருந்த பெரும்பாலான வீதித்தடைகள் அகற்றப்பட்டிருப்பதனால் இரவு 11மணிவரை கடைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதுடன் சனநடமாட்டமும் அதிகமாகவுள்ளது. இம்முறை தீபாவளிக்கு வியாபாரம் களைகட்டியிருந்ததாகக் கூறி வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். யாழ் வியாபாரிகள் சங்கத்தினரின் தீர்மானத்தின்படி அனைத்து பால்மா பக்கற்றுக்களும் 10ரூபா விலைக் குறைத்தே இங்கு விற்கப்பட்டு வருகின்றன.
Average Rating