ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவு மும்பையில் ரூ.500 கோடி போதைப்பொருள் சிக்கியது
மும்பை துறைமுகத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் 200 கிலோ கோகைன் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 500 கோடி ரூபாய் ஆகும்.மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மும்பை துறைமுகத்துக்கு வந்து செல்லும் கப்பல்களை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் கடந்த 2-ந்தேதி, எம்.வி. வாயேஜர் என்ற சரக்கு கப்பல் மும்பை வந்தது.
அந்தக் கப்பலில் 16 கண்டெய்னர்கள் இருந்தன. இதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் எக்ஸ்ரே எந்திரம் மூலம் அவற்றை சோதித்தனர். அப்போது ஒரு கண்டெய்னரில் மரத் துண்டுகளுக்கு இடையில் 8 சிறிய பைகளில் கோகைன் என்ற கொடிய போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 8 பைகளிலும் சேர்த்து மொத்தம் 200 கிலோ எடையுள்ள கோகைன் இருந்தது. இதன் மதிப்பு 500 கோடி ரூபாய் ஆகும்.
சீனாவில் கடந்த மாதம் 136 கிலோ எடையுள்ள கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதான் ஆசியக் கண்டத்தில் பிடிபட்ட மிகப்பெரிய போதைப் பொருளாக இருந்து வந்தது. இந்நிலையில் மும்பை துறைமுகத்தில் பிடிபட்ட போதைப்பொருள், இந்த சாதனையை முறியடித்து விட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.