எமதுநாடு ஏனையவர்களின் குப்பைகளைக் கொட்டும் இடமில்லை -இந்தோனேசிய ரியோ தீவு ஆளுநர்
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழியில் நடுக்கடலில் காப்பாற்றப்பட்ட இலங்கை அகதிகள் 76பேரையும் தனது நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ள இந்தோனேஷியாவின் ரியோ தீவு, “ஏனைய நாடுகளின் குப்பைகளைத் தமது நாடுகளில் கொட்ட அனுமதிக்க முடியாது” என்றும் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழியில் சுமாத்திரா அருகில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட படகிலிருந்த இலங்கையர்களை தனது சுங்கத் திணைக்களப் படகில் ஏற்றி இந்தோனேஷியாவின் ரியோ தீவுக்கு விசாரணைக்காக அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா ஏற்பாடுகளைச் செய்திருந்தது. எனினும், ரியோ தீவின் ஆளுநர், தனக்கு இலங்கை அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். “இலங்கையைச் சேர்ந்த 78 பேர்களுடன் வரும் அவுஸ்திரேலியக் கப்பல் எமது பகுதிக்குள் நுழைவதைத் தடைசெய்கிறோம். இதனைக் கடுமையாகப் பின்பற்றுமாறு எமது படையினருக்கு உத்தரிவிட்டுள்ளோம்’ என அவர் தெரிவித்துள்ளார். இந்தோனேஷிய ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்கும்வரை அவுஸ்திரேலிய கப்பல் கரைக்குவர முடியாது. எமதுநாடு ஏனையவர்களின் குப்பைகளைக் கொட்டும் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை அகதிகளை அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரியோதீவில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
Average Rating