இலங்கை அகதிகளை ஏற்க அவுஸ்திரேலியா மறுப்பு இந்தோனேசிய முகாமில் தடுத்து வைக்க முயற்சி
அவுஸ்திரேலிய சுங்கப்பிரிவினரால் காப்பாற்றப்பட்ட 78 அரசியல் புகலிடம் கோருவோரும் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்துவரப்படமாட்டார்கள் என அந்நாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேற்படி அரசியல் தஞ்சம் கோருவோர் அவுஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இந்தோனேசியா அவர்களை பொறுப்பேற்க மறுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் உள்ளது அதற்கமைய கடற்பகுதியில் காப்பாற்றப்படும் மக்கள் இந்தோனேசியாவுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுவே தொடரும் என கூறியுள்ளார். மேலும் படகில் இருக்கும் இலங்கையர்கள் எந்த நாட்டுக்கு செல்வது என அவர்கள் விண்ணப்பிக்க முடியாது அவர்களுக்கு அந்த விண்ணப்பத்தை விடுக்க முற்றுமுழுதான உரிமை இருக்கலாம் ஆனால் அவர்கள் ஆழ்கடலில் இருந்து மீட்கப்பட்டவர்கள் என்பதால் அது அவர்களின் தெரிவாக முடியாது. கடந்த 10தினங்களுக்கு முன்னர் மேற்படி 78பேரும் இந்தோனேசிய கடற்பகுதியில் வைத்து அவுஸ்திரேலியாவின் ஓசியானிக் விக்கிங் என்ற சுங்கப்பிரிவு கப்பலினால் மீட்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இந்தோனேசியாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அந்நாட்டு மாகாண ஆளுநர் இந்தோனேசியா அகதிகளை குவிக்கும் நாடல்ல என தெரிவித்து அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவுஸ்திரேலியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்தோனேசியாவில் உள்ள டஞ்சாங் பினாங் குடிவரவு தடுப்பு முகாமில் மேற்படி அகதிகளை தங்கவைக்கும் வகையில் அவுஸ்திரேலியா கப்பல் அங்குள்ள கடற்படை தளத்திற்கு செல்லக்கூடுமென இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவுஸ்திரேலியாவுக்குள் வருவதை தடுக்கும் முகமாகவே இவ்வாறான கடும்போக்கை அந்நாடு கடைப்பிடித்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating