சிறுபான்மை கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் தீவிர கவனம்
சிறுபான்மை கட்சிகள் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மை கட்சிகள் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் தேர்தல்களின்போது பொதுவான ஓர் சிறுபான்மைக் கட்சி கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ரேணுகா ஹோட்டலில் தமிழ்-முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் சுமார் 2மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் ரி.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான சிறுபான்மை கட்சிகளை ஒன்றிணைத்து விரிவான ஓர் கூட்டணியை அமைப்பது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவது, கிழக்குமாகாணத்தில் காணி பகிர்வு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, எதிர்வரும் தேர்தல்களில் தமிழ்பேசும் கட்சிகள் ஆதரவளிப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட 8 விடயங்கள் தொடர்பாக குறித்த கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதி இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடி, பேச்சுவார்த்தை நடத்தவுள்ள இக்கட்சிகள், இதன்பின்னர் இணைந்து ஊடக மாநாடொன்றை நடத்தி, தமது முன்னணி குறித்து அறிவிக்க உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த முன்னணியை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டுவருகிறது.
Average Rating