பம்பலப்பிட்டி கடலில் அடித்து மூழ்கடிப்பட்டவர் தமிழ் இளைஞர்.. பொலீஸ் உத்தியோகத்தர் கைது
கொழும்பு, பம்பலப்பிட்டி கடலில் நேற்றுமாலை தமிழ் இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்துள்ளார். குறித்த இளைஞனை பொல்லினால் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பம்பலப்பிட்டி பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்றவராவார். அவருடன் தாக்குதல் நடத்தச் சென்றிருந்த மேலும் மூவரையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி கரையோரத்திலிருந்த இளைஞரொருவர் நேற்றுக்காலை முதல் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் ரயில்கள்மீது கற்களை எறிந்து வந்ததாக கூறப்படுகிறது. இறுதியாக ரயில் ஒன்றின்மீது குறித்த இளைஞன் கற்களை வீசி எறிந்தபோது அங்கிருந்தவர்கள் கூடி அவனை நையப்புடைத்துள்ளனர். அதனையடுத்து கரையோரத்தில் சனக்கூட்டம் அதிகமாகவே அங்கிருந்த ஒருவரினால் இச்சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவன் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் தாழ்ந்து செல்வதாகவும் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக்கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் 12மணியளவில் கரை சேர்ந்துள்ளது. உயிரிழந்தவர் இரத்மலானையைச் சேர்ந்த 26வயதான பாலவண்ணன் சிவகுமார் ஆவார்.
Average Rating