வவுனியா வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது.. புளொட் தலைவர், த.தே.கூட்டமைப்பு பா.உ. கிசோர் ஆகியோரும் பங்கேற்று உரை
வவுனியா வைத்தியசாலையில் இரு சிகிச்சைப் பிரிவுகளுக்கான புதிய கட்டிடமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் வவுனியா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த புதிய மகப்பேற்று அறை மற்றும் மார்புநோய் சிகிச்சைப் பிரிவு என்பன இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம், யுனிசெப் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சு என்பன இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தது. 28மில்லியன் ரூபா செலவில் இந்த இரு தொகுதிகளும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது இவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசுக்களை பெற்றுக் கொண்ட தாய்மார்களுக்கான அன்பளிப்புகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், வன்னி மாவட்ட தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.கிஷோர், வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான த.சித்தார்த்தன், வவுனியா நகரபிதா எஸ்.என்.ஜி நாதன் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து வவுனியா தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இன்றுமுற்பகல் பயிற்சிபெற்ற 185தாதியர்க்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள், இன்று மாத்திரமல்ல 94ம் ஆண்டு தொடக்கம் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி அவர்கள் மேற்கொண்டதைப் போன்று, அதனைத் தொடர்ந்து அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா அவர்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் வவுனியா வைத்தியசாலையின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு முழுமுயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். தற்போது யுத்தம் முடிவுற்றுள்ள நிலைமையில் வடக்கில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நாம் பெரிதும் வரவேற்கிறோம். இந்தப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்ற அதேநேரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் அரசாங்கம் தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு ஓர் தீர்வினை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தற்போது ஹெலஉறுமய, ஜே.வி.பி போன்ற கட்சிகளின் பாராளுமன்றத்தில் தங்கியிருப்பதால் இந்த விடயங்களை முன்னெடுப்பதற்கு பின் நிற்கின்றார். ஆகவே அடுத்த தேர்தலின் பின்பாவது தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Average Rating